Friday, September 11, 2009

கிறிஸ்டோபர் கொலம்பஸ் (1451 - 1506)


கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஐரோப்பாவிலிருந்து கீழ்த்திசை நாடுகளுக்கு மேற்கு நோக்கி ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயன்று தற்செயலாக அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அதன் மூலம், தாம் எதிர்பாராத பெரும் செல்வாக்கினை உலக வரலாற்றில் பெற்றார். இவரது கண்டுபிடிப்பு, புதிய உலகில் தொடர்ந்து நாடாய்வுக்கும், குடியேற்ற ஆதிக்கத்திற்கும் வழி வகுத்தது. இந்தக் கண்டுபிடிப்பு, உலக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் விளங்கியது. அது மக்கள் தொகை பெருகி வந்த ஐரோப்பாவின் மக்கள் குடியேறுவதற்கு இரு புதிய கண்டங்களுக்கு வழி திறந்து விட்டது. ஐரோப்பாவின் பொருளாதாரத்தில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்படுத்திய கனிமச் செல்வத்திற்கும், மூலப் பொருள்களுக்கும் ஆதாரங்களை அளித்தது. அவருடைய கண்டுபிடிப்பினால், அமெரிக்கச் சிவப்பிந்தியர்களின் நாகரிகங்கள் அழிந்து போயின. நாளடைவில், மேற்கு கோளார்த்தத்தில் ஒரு காலத்தில் குடியிருந்த சிவப்பிந்தியரின் நாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட புதிய நாடுகள் அங்கு தோன்றுவதற்கு இக்கண்டுபிடிப்பு வழி வகுத்தது. இந்தப் புதிய நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் பெரும் நிலைமாற்றத்தை ஏற்படுத்தின.
உலகில் இத்துணை பெரும் மாறுதல்களுக்கு வழி வகுத்த இந்த முக்கியக் கண்டுபிடிப்பைச் செய்த கொலம்பஸ், இத்தாலியிலுள்ள ஜெனோவாவில் 1451 இல் பிறந்தார். அவர் தேர்ந்த கடல்வழி வல்லுநராகி ஒரு கப்பலின் தலைவரானார். அட்லாண்டிக் மாகடல் வழியாக நேர் மேற்காகச் சென்று, கிழக்கு ஆசியாவுக்கு நடைமுறை மார்க்கம் ஒன்றைக் கண்டுபிடிக்கலாம் என அவர் உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கையைச் செயற்படுத்துவதற்கு அவர் விடாமுயற்சியுடன் பாடுபட்டார். இறுதியாக, அந்தக் கடல் வழியைக் கண்டுபிடிக்க தாம் மேற்கொள்ளவிருந்த பெரும் பயணத்திற்கு காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லாவின் நிதியுதவியைப் பெறுவதில் வெற்றி கண்டார்.
இவருடைய கப்பல் அணி, 1492 ஆகஸ்ட் 3 அன்று ஸ்பெயினிலிருந்த பயணத்தைத் தொடங்கியது. அவர்கள், முதலில் ஆஃப்ரிக்ககக் கடலோரமிருந்த கானரித் தீவுகளில் இறங்கினார்கள். கானரித் தீவுகளிலிருந்து செப்டம்பர் 6 அன்று புறப்பட்டு, நேர் மேற்காகக் கப்பல்களைச் செலுத்தினார்கள். அது ஒரு நீண்ட பயணமாக இருந்தது. அவரது மாலுமிகள் அச்சம் கொண்டார்கள். தாயகம் திரும்பிவிட விரும்பினார்கள். ஆனால், கொலம்பஸ் பயணத்தைத் தொடரும்படி வலியுறுத்தினார். 1492 அக்டோபர் 12 அன்று அவர்களுக்குத் தரை தென்பட்டது. அங்கே தரையிறங்கினார்கள்.
அடுத்து வந்த மார்ச் மாதத்தில் கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பினார். பெருஞ்சாதனை புரிந்த கொலம்பஸ் வெற்றி வீரருக்குரிய மிக உயர்ந்த மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார். அதன் பின்பு, žனாவுடன் அல்லது ஜப்பானுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் நம்பிக்கையில் அவர் மூன்று முறை அட்லாண்டிக் கடலில் பயணம் மேற்கொண்டார். ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. எனினும், கிழக்கு ஆசியாவுக்கு ஒரு கடல் வழியைத் தாம் கண்டுபிடித்து விட்டதாகவே அவர் உறுதியாக நம்பினார். அவர் கண்டுபிடித்தது கிழக்கு ஆசியாவுக்குரிய கடல் வழி அன்று என்பதைப் பெரும் பாலான மக்கள் நெடுங்காலத்திற்கு பின்னரே உணர்ந்தனர்.
கொலம்பஸ் கண்டுபிடிக்கும் ஏதேனுமொரு நிலப்பகுதிக்கு அவரை ஆளுநராக நியமிப்பதாக அவருக்கு இசபெல்லா அரசி வாக்குறுதியளித்திருந்தார். அதன்படி கொலம்பஸ் கண்டுபிடித்த நிலப்பகுதிக்கு அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால், நிருவாகி என்ற முறையில் அவர் திறமையற்றவராக இருந்தார். எனவே, அவர் ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கை விலங்குடன் ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டார். ஸ்பெயினில் அவர் விடுதலை செய்யப்பட்ட போதிலும், அதன் பின்னர் அவருக்கு நிருவாகப் பதவி எதுவும் அளிக்கப்படவில்லை. அவர் இறுதி நாட்களில் வறுமையில் வாடி மாண்டதாகச் சிலர் கூறுவர். ஆனால் அது உண்மையன்று அவர் 1506 இல் காலமான போது ஓரளவுக்குச் செல்வச் செழிப்புடனேயே இருந்தார்.
கொலம்பசின் முதற்பயணம் ஐரோப்பாவின் வரலாற்றில் புரட்சிகரமான தாக்குறவை ஏற்படுத்தியது. அதைவிட பெரும் விளைவுகள் அமெரிக்காவில் ஏற்பட்டன. இன்றைய உலகில் ஒவ்வொரு பள்ளி மாணவரும் 1492 ஆம் ஆண்டை அறிவர். ஆயினும், உலகப் பெரியோர்களின் வரிசையில் கொலம்பசைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களும் இருக்கின்றனர். இவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு ஒரு காரணம். புதிய உலகைக் கண்டு பிடிக்கும் முதல் ஐரோப்பியர் கொலம்பஸ் இல்லை, என்பதாகும். கொலம்பசுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே லெஃய்ப் எரிக்சன் என்ற ஸ்காண்டிநேவிய (வைக்கிங்) மாலுமி அமெரிக்கா சென்றடைந்ததாகவும், அவரைப் பின்பற்றிக் கொலம்பசுக்கு முன்னதாக பல ஐரோப்பியர்கள் அட்லாண்டிக்கைத் தாண்டி அமெரிக்கா சென்று வந்திருக்கலாம் என்பதும் இவர்களுடைய வாதம். ஆனால், வரலாற்றை நோக்கிப் பார்த்தால் லெஃய்ப் எரிக்சன் முக்கியமானவர் அன்று. அவருடைய கண்டு பிடிப்புகள் யாருக்கும் தெரியவரவில்லை. மேலும், அவருடைய கண்டுபிடிப்புகளினால், ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ பெரும் மாறுதல்கள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. இதற்கு மாறாக, கொலம்பசின் கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகள் ஐரோப்பா முழுவதும் மிக விரைவாகப் பரவின. அவர் ஐரோப்பா திரும்பிய சில ஆண்டுகளிலேயே, அவருடைய கண்டுபிடிப்புகள் நேரடி விளைவுகளாக, புதிய உலகுக்குப் பல புதிய கடற்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. புதிய நிலப்பரப்புகளை வெற்றி கொண்டு, குடியேற்றங்களை அமைக்கும் பணி தொடங்கியது.
கொலம்பஸ் தோன்றாமல் இருந்திருந்தாலும், அவர் சாதித்ததை யாராவது சாதித்திருப்பார்கள் என்று சிலர் வாதிடுவர். இந்நூலில் இடம்பெற்ற மற்ற பெரியார்களைப் பற்றிக்கூட இத்தகைய வாதம் எழுந்ததுண்டு. பதினைந்தாம் நூற்றாண்டு ஐரோப்பா ஏற்கெனவே கொந்தளித்துக் கொண்டிருந்தது. அங்கு வாணிகம் பெருகி வந்தது. வாணிகப் பெருக்கத்திற்குப் புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பது இன்றியமையாததாக இருந்தது. போர்ச்சுகீசியர்கள், கொலம்பசுக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே கிழக்கிந்திய தீவுகளுக்குப் புதிய வழியைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

அமெரிக்கா விரைவிலேயே ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப்பட்டிருக்கக்கூடும். அமெரிக்கக் கண்டத்தை கண்டு பிடிப்பதில் அதிகக் காலத் தாழ்வும் ஏற்பட்டிருக்காது. ஆனால், அமெரிக்காவை 1492 இல் கொலம்பஸ் கண்டுபிடிக்காமல் 1510 இல் ஒரு ஃபிரெஞ்சு அல்லது ஆங்கிலேய நாடாய்வுக் குழு கண்டுபிடித்திருக்குமானால், அதன் பின் விளைவுகள் முற்றிலும் வேறாக இருந்திருக்கும். எது எவ்வாறயினும், அமெரிக்காவை உள்ளபடியே கண்டுபிடித்த மனிதர் கொலம்பஸே ஆவார்.
முதலாவது காரணம் கொலம்பசின் பயணங்களுக்கு முன்னரே. 15 ஆம் நூற்றாண்டு ஐரோப்பியர்கள் பலர் உலகம் உருண்டையானது என்பதை அறிந்திருந்தனர். உலகம் உருண்டை என்ற கொள்கையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கத் தத்துவஞானிகள் எடுத்துக் கூறியுள்ளனர். இது பற்றிய அரிஸ்டாட்டிலின் முற்கோளை 1400 களில் படித்த ஐரோப்பியர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உலகம் உருண்டை என்பதை மெய்பித்துகூ காட்டியதற்காகக் கொலம்பஸ் புகழ் பெறவில்லை. உண்மையைக் கூறின், உலகம் உருண்டை என்பதை மெய்ப்பிப்பதில் அவர் வெற்றி பெறவில்லை. புதிய உலகைக் கண்டுபிடித்தற்காகவே அவர் புகழ் பெற்றார். பதினைந்தாம் நூற்றாண்டு ஐரோப்யிர்களே, அரிஸ்டாட்டிலோ அமெரிக்கக் கண்டங்கள் இருப்பதை அறிந்திருக்கவே இல்லை.
கொலம்பசின் பண்புகள் முற்றிலும் போற்றுவதற்குரியனவாக இருக்கவில்லை. அவர் மிகவும் பேராசை கொண்டவராக இருந்தார். தமது பயணத்திற்கு நிதியுதவியளிக்க இசபெல்லா அரசியை இணங்க வைக்க அவர் அரும்பாடுபட வேண்டியிருந்தது. இதற்கு முக்கிய காரணம் அவர் மிகுந்த பேராசையுடன் பேரம் பேசியதேயாகும். மேலும், இன்றைய அறவியல் தராதரங்களின் அடிப்படையில் அவருடைய நடத்தையைக் கணிப்பது நியாயமில்லையென்றாலும், அவர் சிவப்பிந்தியர்களை மிகவும் கொடூரமாக நடத்தனார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும், இது வரலாற்றில் உன்னதப் பண்பியல்புகளைக் கொண்டிருந்தவர்களின் பட்டியல் அன்று; மாறாக, மிகுந்த செல்வாக்குப் பெற்றவர்களின் பட்டியலே இது. அந்த வகையில் பார்த்தால், இந்தப் பட்டியலில் முன்னணியிடத்தைப் பெறுவதற்கு கொலம்பஸ் முற்றிலும் தகுதியுடையவரே யாவார்.



நன்றி :--உதயன்--

No comments: