Sunday, September 27, 2009

மகா அலெக்சாந்தர் (கி.மு.356-323)

பண்டைய உலகில் பெருமளவு நிலப்பகுதியை வென்று மாபெரும் வெற்றி வீரராகத் திகழ்ந்தவர் மகா அலெக்சாந்தர் ஆவார். இவர் மாசிடோனியாவின் தலைநகராகிய பெல்லாவில் கி.மு. 356 ஆம் ஆண்டில் பிறந்தார். மாசிடோனிய அரசராகிய இரண்டாம் ஃபிலிப் இவருடைய தந்தை. ஃபிலிப் உண்மையிலேயே பேராற்றலும், முன்னறி திறனும் வாய்ந்தவராக விளங்கினார். அவர் தமது இராணுவத்தைத் திருத்தியமைத்து விரிவுபடுத்தினார். அதனைப் பெரும் வல்லமை பொருந்திய போர்ப்படையாக உருவாக்கினார். பின்னர், அவர் கிரீசுக்கு வடக்கிலிருந்த சுற்றுப்புறப் பகுதிகளை வெல்வதற்கு இந்தப் படையைப் பயன்படுத்தினார். பிறகு, தென்திசையில் திரும்பி கிரீசின் பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து, கிரேக்க நகர பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து, கிரேக்க நகர அரசுகளின் ஒரு கூட்டாட்சியை (Federation) ஏற்படுத்தினார். அந்தக் கூட்டாட்சிக்குத் தாமே தலைவரானார். கிரீசுக்குத் தெற்கிலிருந்த பெரிய பாரசீகப் பேரரசின் மீது படையெடுப்பதற்கு அவர் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். கி.மு. 336 ஆம் ஆண்டில் அந்தப் படையெடுப்புத் தொடங்கியிருந்த நேரத்தில் 46 வயதே ஆகியிருந்த ஃபிலிப் கொலையுண்டு மாண்டார். தந்தை இறந்த போது அலெக்சாந்தருக்கு 20 வயதே ஆகியிருந்தது. எனினும், அவர் மிக எளிதாக அரியணை ஏறினார். இளம் வயதிலிருந்தே அலெக்சாந்தருக்குத் தமக்குப்பின் அரச பீடம் ஏறுவதற்கேற்ற பயிற்சியை ஃபிலிப் மன்னர் மிகக் கவனத்துடன் அளித்திருந்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இளம் அலெக்சாந்தர் கணிசமான அளவுக்குப் போர் அனுபவம் பெற்றிருந்தார். இவருக்கு அறிவுக் கல்வி அளிப்பதிலும், ஃபிலிப் கவனக் குறைவாக இருக்கவில்லை. மேலைநாட்டின் நாகரிகத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் அடிகோலிய கிரேக்கப் பேரறிஞராகிய அரிஸ்டாட்டில், ஃபிலிபின் வேண்டுகோளுக்கிணங்கி, அலெக்சாந்தருக்கு ஆசிரியராக இருந்து கல்வி கற்பித்தார்.கிரீசிலும், வடபகுதிகளிலுமிருந்த மக்கள், ஃபிலிப் மன்னரின் மரணம், மாசிடோனியாவின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு ஒரு சிறப்பு வாய்ப்பு எனக் கருதினார். ஆயினும் அலெக்சாந்தர், தாம் பதவியேற்ற ஈராண்டுகளுக்குள்ளேயே, இவ்விரு மண்டலங்களையும் முற்றிலும் தன் வயப்படுத்தினார். பிறகு இவர் பாரசீகத்தின் மீது கவனம் செலுத்தலானார்.மத்திய தடைக்கடலிலிருந்து இந்தியா வரையிலும் பரவியிருந்த ஒரு விரிந்த பேரரசை 200 ஆண்டுகளாகப் பாரசீகர்கள் ஆண்டு வந்தனர். பாரசீகம் வல்லமையின் உச்சத்தில் இல்லாதிருந்த போதிலும் அது அப்போதிருந்த உலகிலேயே மிகப் பெரிய, வலிமை வாய்ந்த, செல்வச் செழிப்புமிக்க வல்லரசாக விளங்கியது.அலெக்சாந்தர் பாரசீகத்தின் மீது கி.மு. 334 ஆம் ஆண்டில் படையெடுப்பைத் தொடங்கினார். ஐரோப்பாவில் தாம் வெற்றி கொண்ட நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அலெக்சாந்தர் தமது படையின் ஒரு பகுதியைத் தாயகத்திலேயே விட்டுவிட்டுச் செல்ல வேண்டியிருந்தது. எனவே, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது, அவருடன் 35,000 வீரர்கள் மட்டுமே சென்றனர். இது, பாரசீகப் படையினரின் எண்ணிக்கையைவிட மிகக் குறைவாக இருந்தது. அலெக்சாந்தரின் படை, பாரசீகப் படையைவிடச் சிறியதாக இருந்தபோதிலும், அவரது படை பல வெற்றிகளைப் பெற்றது. அவரது இந்த வெற்றிக்கு மூன்று முக்கியப் காரணங்கள் கூறலாம். முதலாவதாக, ஃபிலிப் மன்னர் விட்டுச் சென்ற இராணுவம், பாரசீகப் படைகளைவிட நன்கு பயிற்சி பெற்றதாகவும், சீராக அமைக்கப்பட்டதாகவும் இருந்தது. இரண்டாவதாக, அலெக்சாந்தர் மகத்தான இராணுவத் திறன் வாய்ந்த ஒரு தளபதியாக விளங்கினார். அவர் வரலாற்றிலேயே தலைசிறந்த தளபதியாகத் திகழ்ந்தார் என்றுகூடக் கூறலாம். மூன்றாவதாக, அலெக்சாந்தர் தனிப்பட்ட முறையில் அஞ்சாநெஞ்சம் வாய்ந்தவராக இருந்தார். ஒவ்வொரு போரின் தொடக்கக் கட்டங்களிலும் படையணிகள் பின்னாலிருந்து ஆணையிடுவது அலெக்சாந்தரின் வழக்கமாக இருந்த போதிலும், முக்கியமான குதிரைப்படைக்குத் தாமே நேரடியாகத் தலைமைத் தாங்கிப் போரிடுவதைத் தமது கொள்கையாகக் கொண்டிருந்தார். இது மிக அபாயகரமான நடவடிக்கையாக இருந்தது. இதனால், அவர் பலமுறை காயமடைந்தார். ஆனால், அவரது படையினர், தங்களுடைய அபாயத்தில் தங்கள் மன்னரும் பங்கு பெறுவதாகக் கருதினர். தாம் மேற் கொள்ளத் தயங்கும் அபாயத்தை ஏற்கும் படி தங்களை அரசர் கேட்க மாட்டார் என்று அவர்கள் நம்பினார்கள். இதனால் அவர்களின் மன ஊக்கம் மிக உச்ச நிலையில் இருந்தது.அலெக்சாந்தர் தமது படைகளை முதலில் சிறிய ஆசியா (Asia Minor) வழியாகச் செலுத்தினார். அங்கு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறுசிறு பாரசீகப் படைகளைத் தோற்கடித்தார். பிறகு, வடக்குச் சிரியாவுக்குள் நுழைந்து, இஸ்ஸஸ் என்னுமிடத்தில் ஒரு பெரிய பாரசீகப் படையைப் படுதோல்வியடையச் செய்தார். அதன் பின்பு, அலெக்சாந்தர் மேலும் தெற்கே சென்று, இன்று லெபனான் என வழங்கப் படும் அன்றையப் பொனீசியாவின் தீவு நகரமாகிய டயர் நகரத்தை மிகக் கடினமான ஏழுமாத முற்றுகைக்குப் பிறகு கைப்பற்றினார். டயர் நகரத்தை அலெக்சாந்தர் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபோதே, அலெக்சாந்தருடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டு, தமது பேரரசில் பாதியை அவருக்குக் கொடுத்துவிடத் தாம் தயாராக இருப்பதாகப் பாரசீக மன்னர் அலெக்சாந்தருக்கு தூது அனுப்பினார். இந்தச் சமரசத்தை ஏற்றுக் கொள்ளலாம் என அலெக்சாந்தரின் தளபதிகளில் ஒருவராகிய பார்மீனியோ கருதினார். நான் அலெக்சாந்தராக இருந்தால், இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்வேன், என்று பார்மீனியோ கூறினார். அதற்கு அலெக்சாந்தர் பார்மீனியோவாக இருந்தால் நானுங்கூட அதை ஏற்றுக் கொள்வேன் என்று விடையளித்தார்.டயர் நகரம் வீழ்ச்சியடைந்த பின்பு, அலெக்சாந்தர் தொடர்ந்து தெற்கு நோக்கிச் சென்றார். இருமாத கால முற்றுக்கைக்குப் பிறகு காசா நகர் வீழ்ந்தது. எகிப்து போரிடாமலே அவரிடம் சரணடைந்தது. பின்னர், அலெக்சாந்தர் தம் படைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்காக எகிப்தில் சிறிது காலம் தங்கினார். அப்போது, 24 வயதே ஆகியிருந்த அலெக்சாந்தர் எகிப்து அரசராக (Pharoah) முடிசூட்டிக் கொண்டார். அவர் ஒரு கடவுளாகவும் அறிவிக்கப்பட்டார். பின்னர், அவர் தம் படைகளை மீண்டும் ஆசியாவுக்குள் செலுத்தினார். கி.மு. 331 ஆம் ஆண்டில் ஆர்பெலா என்னுமிடத்தில் நடந்த இறுதிப் போரில் ஒரு பெரிய பாரசீகப் படையை அவர் முற்றிலுமாகத் தோற்கடித்தார்.ஆர்பெலா வெற்றிக்குப் பிறகு அலெக்சாந்தர் பாபிலோன் மீது படையெடுத்தார். சூசா, பெரிசிப்போலிஸ் போன்ற பாரசீகத் தலைநகர்களையும் தாக்கினார். மூன்றாம் டரையஸ் என்ற பாரசீக மன்னர், அலெக்சாந்ரிடம் சரணடைந்து விடலாம் என எண்ணிக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் சரணடைவதைத் தடுப்பதற்காக அவரை அவருடைய அதிகாரிகள் கி.மு. 330 ஆம் ஆண்டில் கொலை செய்தனர். எனினும், அலெக்சாந்தர் டரையசுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசரைத் தோற்கடித்து அவரைக் கொன்றார். மூன்றாண்டுகள் போரிட்டு கிழக்கு ஈரான் முழுவதையும் அடிமைப் படுத்தினார். பின்பு, மத்திய ஆசியாவுக்குள் புகுந்தார்.இப்போது பாரசீகப் பேரரசு முழுவதும் அலெக்சாந்தருக்கு அடிமைப்பட்டு விட்டது. அத்துடன் அவர் தாயகம் திரும்பி, புதிய ஆட்சிப் பகுதிகளில் தமது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், நாடுகளைப் பிடிக்கும் அவரது வேட்கை இன்னும் தணியாமலே இருந்தது. அவர் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்துச் சென்றார். அங்கிருந்து, அவர் தமது இராணுவத்தை இந்துகுஷ் மலைகளைத் தாண்டி இந்தியாவுக்குள் செலுத்தினார். மேற்கு இந்தியாவில் பல வெற்றிகளைப் பெற்றார். கிழக்கு இந்தியா மீது படையெடுக்க விழைந்தார். ஆனால், பல ஆண்டுகள் இடைவிடாமல் போரிட்டுக் களைப்பும் சலிப்பும் அடைந்த அவரது படை வீரர்கள், மேற்கொண்டு படையெடுத்து செல்ல மறுத்தனர். அதனால், அலெக்சாந்தர் அரை மனதுடன் பாரசீகம் திரும்பினார்.பாரசீகம் திரும்பிய பின்னர், அடுத்த ஓராண்டுக் காலத்தை தமது பேரரசையும் இராணுவத்தையும் மறுசீரமைப்புச் செய்வதில் செலவிட்டார். இது மிகப் பெரிய சீரமைப்புப் பணியாக விளங்கியது. கிரேக்கப் பண்பாடுகள் உண்மையான நாகரிகம் என்று அலெக்சாந்தர் நம்பினார். கிரேக்கர்கள் அல்லாத பிற மக்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என அவர் கருதினார். கிரேக்க உலகம் முழுவதிலுமே இந்தக் கருத்துதான் நிலவியது. அரிஸ்டாட்டில் கூட இக்கருத்தையே கொண்டிருந்தார். ஆனால், பாரசீகப் படைகளை தாம் முற்றிலுமாகத் தோற்கடித்த பின்னர், பாரசீகர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அலெக்சாந்தர் உணரலானார். தனிப்பட்ட பாரசீகர்கள், தனிப்பட்ட கிரேக்கர்களைப் போன்று அறிவாளிகளாகவும், திறமைசாலிகளாகவும், மதிப்புக்குரியவர்களாகவும் இருக்க முடியும் என்பதை அவர் அறிந்து கொண்டார். அதனால், அவர் தமது பேரரசின் இரு பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கிரேக்கர்-பாரசிகக் கூட்டுப் பண்பாட்டையும் முடியரசையும் ஏற்படுத்தி அதன் அரசராகத் தாமே ஆட்சி செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டார். இந்தக் கூட்டரசில் பாரசீகர்கள், கிரேக்கர்கள், மாசிடோனியர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் சரிநிகரான மனதார விரும்பியதாகத் தோன்றுகிறது. தமது இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக, ஏராளமான பாரசீகர்களை அவர் தமது படையில் சேர்த்துக் கொண்டார். கிழக்கு-மேற்குத் திருமணம் என்ற பெயரில் ஒரு மாபெரும் விருந்தையும் நடத்தினார். இந்த விருந்தின்போது பல்லாயிரம் மாநிடோனியப் படை வீரர்களுக்கும் ஆசியப் பெண்களுக்கும் மணம் முடிக்கப் பெற்றது. அலெக்சாந்தர் கூட, தாம் ஏற்கெனவே ஓர் ஆசிய இளவரசியை மணம் புரிந்திருந்தபோதிலும் டேரியஸ் மன்னனின் மகளைத் திருமணம் செய்து கொண்டார்.மறுசீரமைப்பு செய்யப்பட்ட தமது படைகளைக் கொண்டு மேலும் படையெடுப்புகளை நடத்த அலெக்சாந்தர் விரும்பினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் அராபியர் மீது படையெடுக்கத் திட்டமிட்டிருந்தார். பாரசீகப் பேரரசுக்கு வடக்கிலிருந்த மண்டலங்களையும் கைப்பற்றவும் அவர் ஆசைப்பட்டார். இந்தியா மீது மறுபடியும் படையெடுக்கவும், ரோம், கார்தேஜ், மேற்கு மத்திய தரைக்கடல் பகுதி ஆகியவற்றை வெற்றி கொள்ளவும் அவர் திட்டமிட்டிருக்க வேண்டும். அவருடைய திட்டங்கள் என்னவாக இருந்திருப்பினும், மேற்கொண்டு படையெடுப்புகள் நடைபெறாமலே போயிற்று. கி.மு. 323 ஆம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் பாபிலோனில் இருந்த போது அலெக்சாந்தர் திடீரெனக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு நோயுற்றார். பத்து நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார். அப்போது அவருக்கு 33 வயது கூட நிறைவடைந்திருக்கவில்லை.அலெக்சாந்தர் தமது வாரிசை நியமித்துவிட்டுச் செல்லவில்லை. அவர் இறந்ததும், அரச பீடத்தைப் பிடிப்பதற்குக் கடும் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் அலெக்சாந்தரின் தாய், மனைவிமார்கள், குழந்தைகள் அனைவரும் கொல்லப்பட்டனர். இறுதியில் அவரது பேரரசை அவருடைய தளபதிகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.அலெக்சாந்தர் தோல்வி காணாமல், இளமையிலேயே மரணமடைந்தமையால், அவர் உணிரோடிருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று பலவிதமான ஊகங்கள் நிலவின. அவர் மேற்கு மத்தியத் தரைக் கடல் பகுதி நாடுகள் மீது படையெடுத்திருந்தால், அவர் பெரும்பாலும் வெற்றியடைந்திருப்பார். அத்தகைய நேர்வில், மேற்கு ஐரோப்பாவின் வரலாறு முழுவதும் முற்றிலும் வேறாக அமைந்திருக்கலாம். ஆனால், அலெக்சாந்தரின் உண்மையான செல்வாக்கினை மதிப்பிடுவதற்கு இத்தகைய ஊகங்களால் ஒரு பயனுமில்லை.அலெக்சாந்தர் வரலாற்றில் மிகவும் வியக்கத்தக்க மனிதராக விளங்கினார். அவருடைய வாழ்வும், ஆளுமையும் கவர்ச்சிமிக்கதாக இருந்தது. அவருடைய வாழ்வின் உண்மை நிகழ்ச்சிகள்கூட வியப்புக்குரியதாகவே உள்ளன. அவருடைய பெயரால் எத்தனையோ கட்டுக் கதைகள் புனையப் பெற்றன. வரலாற்றிலேயே தலைசிறந்த போர் வீரனாக விளங்க அவர் வேட்கை கொண்டார். மாபெரும் வெற்றி வீரன் பட்டத்திற்கு அவர் முற்றிலும் தகுதியுடையவராகத் திகழ்ந்தார். தனிப்பட்ட போர் வீரன் என்ற முறையில் அலெக்சாந்தர், திறமை அஞ்சா நெஞ்சம் ஆகிய இரண்டின் ஒருங்கிணைந்த உருவமாக விளங்கினார். தளபதி என்ற முறையில் அவர் ஒப்பற்றவராகத் திகழ்ந்தார். பதினொராண்டுகள் அவர் போரில் ஈடுபட்டிருந்தார். ஆனால், ஒரு போரில்கூட அவர் தோல்வி கண்டதில்லை.அதே சமயத்தில், அலெக்சாந்தர் ஒரு தலைசிறந்த அறிவாளியாகவும் விளங்கினார். பண்டைய உலகின் மிகச் சிறந்த அறிவியல் அறிஞரும், தத்துவ ஞானியுமாகிய அரிஸ்டாட்டிலிடம் அவர் கல்வி பயின்றார். ஹோமரின் கவிதையைப் பொன்னேபோல் போற்றினார். கிரேக்கர் அல்லாதவர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அவர் உணர்ந்து கொண்டதும் அவர் தம் காலத்திய பெரும்பாலான கிரேக்கச் சிந்தனையாளர்களைவிட அதிகப் பரந்த நோக்குடன் நடந்து கொண்டார். ஆனால் மற்ற வழிகளில் அவர் மிகுந்த குறுகிய நோக்குடன் நடந்தது வியப்பளிக்கிறது. போர்க்களத்தில் அவர் அடிக்கடி அபாயங்களை ஏற்றார் என்ற போதிலும் அவர் தமக்கு ஒரு வாரிசை நியமிப்பதில் அக்கறை காட்டாமல் இருந்து விட்டார். அவ்வாறு வாரிசை நியமிக்க அவர் தவறியதுதான் அவரது மரணத்திற்குப் பிறகு, அவருடைய பேரரசு விரைவாக உடைந்து சிதறுண்டு போனதற்குப் பெரிதும் காரணமாகும்.அலெக்சாந்தர் கவர்ச்சியான தோற்றமுடையவராக இருந்தார். அவர் மிகுந்த சமரச மனப்பான்மையுடன் நடந்து கொண்டார். தாம் தோற்கடித்த பகைவர்களிடம் கருணை காட்டினார். அதேசமயம், அவர் ஆணவம் கொண்டவராகவும், எளிதில் ஆத்திரங்கொள்ளும் முரட்டுக் குணமுடையவராகவும் இருந்தார். ஒரு சமயம் குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தம் உயிரை ஒருமுறை காப்பாற்றிய கிளைட்டஸ் என்ற ஆரூயிர் நண்பனையே இவர் கொன்று விட்டார்.நெப்போலியன், ஹ’ட்லர் ஆகியோரைப் போன்று, அலெக்சாந்தர் தமது தலைமுறையினர் மீதே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார். ஆனால், அவரது குறுகிய காலச் செல்வாக்கு அவர்களுடையதைவிடக் குறைவாகவே இருந்தது. அவர் காலத்தில் பயணம் மற்றும் செய்திப் போக்குவரத்து வசதிகள் மிகக்குறைவாக இருந்தமையால், உலகின் மிகக் குறுகிய பகுதிக்கே அவருடைய செல்வாக்குச் சென்றது.அலெக்சாந்தரின் படையெடுப்புகளினால் ஏற்பட்ட நீண்ட கால விளைவுகளில் மிக முக்கியமானது, கிரேக்க நாகரிகத்தையும், மத்திய கிழக்கு நாகரிகத்தையும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாகவே தொடர்பு கொள்ள செய்து, அதன் வாயிலாக இரு பண்பாடுகளுக்கும் வளமூட்டியதாகும். அலெக்சாந்தரின் ஆயுட்காலத்திலும், அவரது மறைவுக்குப் பின்பு, உடனடியாகவும், ஈரான், மெசொப்பொட் டோமியா, சிரியா, ஜூடியா, எகிப்து ஆகிய நாடுகளில் கிரேக்கப் பண்பாடு விரைவாகப் பரவியது. அலெக்சாந்தருக்கு முன்பு, இந்த மண்டலங்களில் கிரேக்கப் பண்பாடு மிகவும் மெதுவாகவே நுழைந்து வந்தது. மேலும், கிரேக்கப் பண்பாட்டை அது எப்போதும் எட்டாதிருந்த இந்தியாவில், மத்திய ஆசியாவிலுங்கூட அலெக்சாந்தர் பரப்பினார். பண்பாட்டுச் செல்வாக்கு என்பத எந்தவகையிலும் ஒரு வழிப்பாதை அன்று. அலெக்சாந்தர் வாழ்ந்த காலத்துக்கு அடுத்துப் பிந்திய நூற்றாண்டுகளில், கீழை நாடுகளின் கொள்கைகள் முக்கியமாகச் சமயக் கொள்களைகள் கிரேக்க உலகில் பரவின. பெரும்பாலும் கிரேக்க அம்சங்களும், வலுவான கீழை நாட்டுச் செல்வாக்குகளும் இணைந்த இந்தக் கலப்புப் பண்பாடுதான் இறுதியில் ரோமாபுரியைப் பாதித்தது.அலெக்சாந்தர் தமது ஆட்சிக் காலத்தின்போது, இருபதுக்கும் அதிகமான புதிய நகரங்களை நிறுவினார். இவற்றுள் மிகவும் புகழ்பெற்றது எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியாவாகும். இந்த நகரம் விரைவிலேயே உலகின் முன்னணி நகரங்களுள் ஒன்றாகவும், தலைசிறந்த பண்பாட்டுக் கல்வி மையமாகவும் முன்னேற்றமடைந்தது. ஆஃப் கானிஸ்தானிலுள்ள ஹ“ராத், கந்தஹார் போன்ற வேறு சில நகரங்களும் முக்கியமான நகரங்களாக உருவாகின.ஒட்டுமொத்தமான செல்வாக்கில் அலெக்சாந்தர், நெப்போலியன், இட்லர் ஆகியோர் நெருங்கிய தொடர்புடையவர்களாகத் தோன்றுகிறது. அலெக்சாந்தரின் குறுகியச் செல்வாக்கு, மற்ற இவருடைய செல்வாக்கை விடக் குறைவு. ஆனால், அந்த இருவருடைய செல்வாக்கை விடக் குறைவு. ஆனால், அந்த இருவருடைய செல்வாக்கும், அலெக்சாந்தரின் செல்வாக்கைவிட மிகக் குறைந்த காலமே நீடித்தது. அந்தக் காரணத்துக்காகவே, அலெக்சாந்தர், மற்ற இருவருக்கும் சற்று முன்னதாக இடம் பெற்றிருக்கிறார்.

Saturday, September 26, 2009

அசோகர் (கி.மு. 300-கி.மு.232)

இந்திய வரலாற்றில் மிகப் பெரும் புகழ் வாய்ந்த அரசராக விளங்கியவர் அசோகர். இவர் மௌரிய மன்னர் மரபில் மூன்றாவது அரசர். மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரியரின் பேரன். சந்திரகுப்தர் இந்திய இராணுவத் தலைவராக விளங்கினார். அவா மகா அலெக்சாந்தரின் இந்தியப் படை எடுப்பிற்குப் பிறகு, வட இநதியாவின் பெரும் பகுதியை வென்று அதன் மூலம் இந்திய வரலாற்றிலேயே ஒரு பெரும் பேரரசை முதன் முதலில் நிறுவினார்.அசோகர் பிறந்த ஆண்டு தெரியவில்லை. பெரும்பாலும் கி.மு.300 ஆண்டு வாக்கில் அவர் பிறந்திருக்கலாம். கி.மு.273 ஆம் ஆண்டில் அசோகர் அரியணை ஏறினார். முதலில் தன் பாட்டனாரின் அடியொற்றி தம் ஆட்சி எல்லைகளை இராணுவ நடவடிக்கை மூலம் விரிவுபடுத்த விழைந்தார். அவரது ஆட்சியின் எட்டாம் ஆண்டில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்திருந்த கலிங்க நாட்டின் (இன்றைய ஒரிசா மாநிலம்) மீது போர் தொடுத்து வெற்றி கண்டார். ஆனால் தமது வெற்றியின் பின்னணியில் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எண்ணித் தாங்கொணாணுத் துயருற்றார். கலிங்கப் போரில் ஒரு இலட்சம் பேர் இறந்தனர். அதற்கும் அதிகமானோர் காயமுற்றனர். இதனால், அதிர்ச்சியும் கடுங்கழுவிரக்கமும் கொண்ட அசோகர் இந்தியா முழுவதையும் வெற்றி கொள்ள வேண்டும் என்ற தம் எண்ணத்தைக் கைவிட்டார். மாறாக, எல்லா வகை ஆக்கிரமிப்பிப் போர்களையும் அறவே ஒழித்துவிட உறுதிபூண்டார். அவர் புத்த சமயத்தைத் தமது சமயக் கொள்கையாக ஏற்றுக் கொண்டார். வாய்மை. கருணை. அகிம்சை ஆகிய அறநெறிகளைத் தம் வாழ்வில் கடைப்பிடிக்க முயன்றார்.
அசோகர் தம் சொந்த வாழ்க்கையில் வேட்டையாடுவதைக் கைவிட்டார். புலால் உண்ணாமையைப் பின்பற்றினார். பல்வேறு மனிதாபிமான அரசியல் கொள்கைகளை அவர் செயற்படுத்தியது மிக முக்கியமானதாகும். அவர் மருத்துவமனைகளையும், விலங்குகளுக்குப் புகலிடங்களையும் நிறுவினார்; கொடுமையான சட்டங்களைச் சீர்படுத்தினார்; சாலைகளை அமைத்தார்; நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கினார்; மக்களிடையே பக்தியுணர்வை வளர்க்கவும், நட்புறவை ஊக்குவிக்கவும், "தருமாதிகாரிகள்" என்ற சிறப்பு அரசு அலுவலர்களை நியமித்தார். அவரது ஆட்சியில் எல்லாச் சமயங்களும் மதிக்கப்பட்டன. ஆனால் அசோகர் குறிப்பாகப் புத்த சமயத்துக்கு ஊக்கமளித்தார். அதனால் புத்த சமயம் மக்ளிடைய அதிகமாகச் செல்வாக்கு பெற்றது. புத்த சமயப் பிரச்சாரகர்களைப் பல அயல்நாடுகளுக்கு அனுப்பினார். அவற்றுள் முக்கியமாக இலங்கை சென்ற குழு பெருமளவில் வெற்றிகரமாகப் பணிபுரிந்தது.அசோகர் தமது நீண்ட ஆட்சிக் காலத்தின்போது, தமது வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், கொள்கைகளையும பாறைகளிலும், துர்பிகளிலும் பொறிக்கும்படி செய்தார். இந்த நினைவுச் சின்னங்களில் பல இன்றும் நிலைத்திருக்கின்றன. இந்தச் சின்னங்கள் விரிவான நிலப்பபகுதிகளில் காணப்படுவதால் அவை அசோகப் பேரரசின் ஆட்சிப் பரப்பின் அளவை அறிவதற்கு ஆதாரங்களாக விளங்குகின்றன. இவற்றில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள், அவரது கொள்கைகளை அறிவதற்கு முக்கிய் அகச் சான்றுகளாகும். இந்தத் துர்பிகள் அவர் காலத்திய சிறந்த கலை வேலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகவும் விளங்குகின்றன.அசோகரின் இறப்பிற்குப் பிறகு 50 ஆண்டுகளுக்குள் மௌரியப் பேரரசு சிதறுற்றது. அதன் பின்பு அது எழுச்சி பெறவே இல்லை. ஆனாலும், அசோகர் புத்த சமயத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் உலகத்தின் மீது அவர் பெற்ற நீண்ட காலச் செல்வாக்கு மிகப் பெரியதாகும். அவர் ஆட்சி பீடம் ஏறியபோது புத்தச் சமய்ம் வட இந்தியாவில் ஒரு குறுகிய வட்டாரத்திலேயே செல்வாக்குப் பெற்றிருந்தது. அவா இறக்கும்போது இந்தியா முழுவதும் அது பரவியிருந்ததோடு இந்தியாவின் அண்டை நாடுகளிலும் மிக விரைவாகப் பரவி வந்தது. கௌதம புத்தர் நீங்கலாக புத்த சமயம் ஓர் உலகப் பெரும் சமயமாக வளர்வதற்கு வேறெவரையும் விட முக்கிய காரணமாக இருந்தவர் அசோகரேயாவார்.

Friday, September 25, 2009

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், ஒப்புயர்வற்ற அறிஞராகவும் விளங்கிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவரது சார்புக் கொள்கை க்காக (Theory of Relativity) உலகப் புகழ் பெற்றவர். இவர் வகுத்தமைத்த சார்புக் கொள்கையில் உண்மையில் இரு கொள்கைகள் அடங்கியுள்ளன. ஒன்று "சிறப்புச் சார்புக் கொள்கை" (Special Theory of Relativitiy) இது 1905 இல் வகுத்தமைக்கப்பட்டது. இன்னொன்று " பொதுச் சார்புக் கொள்கை" (General Theory of Relativity) இது 1915 இல் வகுத்தமைக்கப்பட்டது. இந்த இரண்டாவது கொள்கையை ஐன்ஸ்டீனின் "ஈர்ப்பு விதி" (Law of Gravitation) என அழைப்பது பொருத்தமாக இருக்கும். இவ்விரு கொள்கைகளுமே மிகவும் சிக்கலானவை. எனவே, அவற்றை இங்கு விளக்கப் போவதில்லை. எனினும், சிறப்புச் சார்பில் குறித்துச் சில கருத்துகளைக் கூறுவது பொருத்தமாக இருக்கும்." எல்லாம் சார்புடையவை" என்பது நன்கறிந்த மூதுரை. இந்தத் தத்துவ வெற்றுரையை ஐன்ஸ்டீன் கொள்கை மீண்டும் கூறவில்லை. அறிவியல் அளவைகள் சார்புடையவை என்பதைத் துல்லியமான கணித சூத்திரமாக இவரது கொள்கை கூறுகிறது. காலம் மற்றும் இடம் பற்றிய அகநிலைப் புலனியல் காட்சிகள் யாவும் நோக்குபவரைப் பொருத்தது என்பது தெளிவாக உண்மை. ஆனால், ஐன்ஸ்டீனுக்கு முன்பு இந்த அகநிலைக் கருத்துகளின் பின்புலத்தில் உண்மையான தொலைவுகளும், வரம்பற்ற காலமும் இருப்பதாகவும், அவற்றைத் துல்லியமான கருவிகளைக் கொண்டு புறநோக்குடன் அளவிட முடியும் என்றும் பெரும்பாலான மக்கள் நம்பினார்கள். வரம்பற்ற காலம் என்று எதுவும் இருப்பதை ஐன்ஸ்டீன் கொள்கை மறுத்து, அறிவியல் சிந்தனையைப் புரட்சிகரமாக மாற்றியது. காலம் மற்றும் இடம் பற்றிய நமது கருத்துகளை அவரது கொள்கை எவ்வாறு அடியோடு மாற்றியது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு கூறலா"X' என்னும் ஒரு விண்வெளிக் கலம், வினாடிக்கு 1,00,000 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியிலிருந்து விலகிச் செல்வதாகக் கொள்வோம். விண்வெளிக் கலத்திலும், பூமியிலும் உள்ள நோக்கர்கள் இந்த வேகத்தை அளவிடுகிறார்கள். அவர்களது அளவீடுகள் ஒத்திருக்கின்றன. இதற்கிடையில் 'Y' என்னும் விண்வெளிக் கலம், "X' என்ற விண்வெளிக் கலம் செல்லும் அதே திசையில், ஆனால் அதைவிட அதிக வேகத்தில் செல்கிறது. பூமியிலுள்ள நோக்கர்கள் "Y' விண்வெளிக் கலத்தின் வேகத்தை அளவிடுங்கால், அது வினாடிக்கு 1,80,000 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியிலிருந்து விலகிச் செல்வதாகக் காண்கிறார்கள். "Y' விண்வெளிக் கலத்திலுள்ள நோக்கர்கள் அதே முடிவுக்குத் தான் வருவார்கள். இரு விண்வெளிக் கலங்களும் ஒரே திசையில் செல்வதால், அவற்றின் வேகங்களுக்கிடையிலான வேறுபாடு வினாடிக்கு 80,000 கிலோ மீட்டர் என்றும், வேகமாகச் செல்லும் கலம், மெதுவாகத் செல்லும் கலத்திலிருந்து இதன் வேக விகிதத்திலேயே விலகிச் செல்லும் என்றும் முடிவு கட்டத் தோன்றும். ஆனால், இரு விண்வெளிக் கலங்களிலிருந்தும் காட்சிப் பதிவீடுகளைச் செய்யும்போது, அந்த இரு கலங்களுக்குமிடையிலான தொலைவு வினாடிக்கு 80,000 கி.மீ. என்ற வீதத்தில் இல்லாமல், வினாடிக்கு 1,00,000 கி.மீ. என்ற வீதத்தில் அதிகரிப்பதை இரு கலங்களிலுமுள்ள நோக்கர்கள் ஒப்புக் கொள்வார்கள் என ஐன்ஸ்டீன் கொள்கை ஊகித்துரைக்கிறது.வெளித் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடும் போது, இந்த முடிவு பொருத்தமற்றதாகத் தோன்றலாம். இதில் ஏதேனும் சொல்லாட்சித் தந்திரம் இருக்கிறது என்ற ஐயம் ஏற்படக் கூடும்.இந்தச் சிக்கலில் சில முக்கிய விவரங்கள் விடுபட்டிருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். ஆனால் இத்தகைய ஐயப்பாட்டுக்கு இடமேயில்லை. விண்வெளிக் கப்பல்களின் கட்டுமானமோ, அவற்றைச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் விசைகளோ இந்த முடிவுகளுடன் ஒரு தொடர்பும் கொண்டிருக்கவில்லை. காட்சிப் பதிவீடுகளில் எவையேனும் தவறுகள் காரணமாகவும் இந்த முடிவுகள் ஏற்படவில்லை. அளவீடும் கருவிகளிலும் எவ்விதக் கோளாறும் இல்லை. ஏமாற்று வேலை எதுவும் இதில் கிடையாது. காலம் மற்றும் இடம் இரண்டின் அடிப்படை இயல்பின் விளைவாகவே மேற்சொன்ன முடிவு ஏற்பட்டதாக ஐன்ஸ்டீன் உறுதிபடக் கூறியுள்ளார். இவையெல்லாம் செயல்முறைக்கு ஒவ்வாத,. மட்டுமீறிய கோட்பாட்டியலானவை எனக் கருதத் தோன்றும். உண்மையைக் கூறின், நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு கற்பனைக் கருதுகோள் என்று சார்புக் கொள்கையைப் பல ஆண்டுகளாகப் பெரும்பாலோர் ஒதுக்கி வைத்திருந்தார்கள். 1945 ஆம் அண்டில் ஹிரோஷிமாவிலும், நாகசாகிலும் அணுகுண்டுகள் போடப்பட்ட பின்னர், இந்தத் தவற்றினை யாரும் செய்யவில்லை." பொருண்மையும், ஆற்றலும் ஒருவகையில் சரி நிகரானவை; அவற்றுக்கிடையிலான தொடர்பினை E= Mc2 என்னும் சூத்திரதின் மூலம் குறிப்பிடலாம். இதில் E என்பது ஆற்றல்; M என்பது பொருண்மை. C என்பது ஒரு பெரிய இலக்கம். அது வினாடிக்கு 1,68,000 கி.மீ. - க்குச் சமம். அதன் இருபடி வர்க்கம் (C2) இதைவிட மிகப்பெரிய இலக்கணமாகும். எனவே, பொருண்மையின் ஒரு சிறிய நுண்பகுதி ஓரளவு உருமாற்றம் பெற்றால் கூட அளவற்ற ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது தெளிவாகிறது.ஆனால், E=Mc2 என்ற சூத்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு எவரும் ஓர் அணுமின் நிலையத்தை நிறுவி விடவோ இயலாது. அணு ஆற்றலை உருவாக்குவதில் வேறு பலரும் மிக முக்கியமான பணிகளை ஆற்றியிருக்கிறார்கள் என்பதை இங்கு மறந்துவிடலாகாது. இத்துறையில் ஐன்ஸ்டீனின் பங்கு தலையாயது என்பதை மறுப்பதற்கில்லை. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட்டுக்கு 1939 இல் ஐன்ஸ்டீன் ஒரு கடிதம் எழுதினார். அதில், அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான வாய்ப்புகளை விளக்கியிருந்தார். அத்துடன், ஜெர்மானியர்கள் அணுகுண்டு தயாரிப்பதற்கு முன்னதாக அமெரிக்கா தயாரித்து விட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்தக் கடிதம் தான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மன்ஹாட்டன் திட்டத்தை அமெரிக்கா தொடங்குவதற்குக் காரணமாக இருந்தது. இந்தத் திட்டத்தின் விளைவாகத்தான் முதலாவது அணுகுண்டு தயாரிக்கப்பட்டது. சிறப்புச் சார்பியல் மீது கடுமையான சர்ச்சை எழுந்தது. ஆனால், ஓர் அம்சத்தை மட்டும் எல்லோரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டார்கள். அதாவது " இதுகாறும் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் கோட்பாடுகள் இது" என்பதே அது. ஆனால், ஐன்ஸ்டீன் " பொதுச் சார்புக் கொள்கை" இதை விடவும் திடுக்கிடத்தக்கதாக இருந்தது. ஈர்ப்பாற்றல் விளைவுகள், இயற்பியல் விசைகளின் காரணமாக ஏற்படுபவை" என்று ஐன்ஸ்டீனின் கொள்கை கூறுகிறது. இது உண்மையிலே அதிர்ச்சியூட்டிய ஒரு கொள்கையாகும்.! விண்வெளியிலுள்ள ஒரு வளைவை எவ்வாறு அளவிட முடியும்? விண்வெளி வளைந்திருக்கிறது எனக் கூறுவதே சரிதானா? ஐன்ஸ்டீன் தமது கொள்கையை வகுத்தமைத்துக் கூறியதுடன் நின்றுவிடவில்லை. அவர் தமது கொள்கையை தெள்ளத்தெளிவாக கணித வடிவத்தில் அமைத்தார். அதிலிருந்து, திட்டவட்டமான அனுமானங்களைச் செய்ய முடிந்தது. அந்த அனுமானங்கள் பரிசோதிக்கப்பட்டு உண்மையென மெய்ப்பிக்கப்பட்டன. முழுச்சூரிய கிரணங்களின்போது மேற்கொள்ளப்பட்ட பல பரிசோதனைகளிலிருந்து, ஐன்ஸ்டீனின் சமன்பாடுகள் சரியானவை என்பது உறுதியாகியிருக்கிறது." பொதுச்சார்புக் கொள்கை" பல வகைகளில் மற்ற அறிவியல் விதிகள் அனைத்திலிருந்தும் வேறுபட்டுத் தனிச்சிறப்புடன் திகழ்கிறது. முதலாவதாக, ஐன்ஸ்டீன் இந்தக் கொள்கையைக் கவனமான பரிசோதனைகளின் அடிப்படையில் வகுத்தமைக்கவில்லை. கிரேக்கத் தத்துவ ஞானிகளும், மத்திய காலத்திய அறிஞர்களும் செய்ய முயன்ற போது, செவ்வொழுங்கு (Symmetry) , கணித நேர்த்தி (Mathematical Elegance) ஆகியவற்றின் அடிப்படையிலான பகுத்தறிவுவாத ஆதாரங்களைக் கொண்டு தமது கொள்கையை வகுத்தமைத்தார். (இவ்வாறு செய்வதன் மூலம் நவீன அறிவியலின் அனுபவ முறைக் கண்ணோட்டத்திலிருந்து அவர் விலகிச் சென்றார்). ஆனால், அழகு செவ்வொழுங்கு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்த கிரேக்கர்கள், பரிசோதனைகளுக்குத் தாக்குப் பிடிக்கவல்ல எந்திரவியல் கோட்பாடு ஒன்றை வகுத்தமைப்பதில் ஒரு போதும் வெற்றி பெறவில்லை. ஆனால், ஐன்ஸ்டீன் கொள்கை இது காறும் மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் பரிசோதனைகளிலும் வெற்றி கண்டிருக்கிறது. பொதுச் சார்புக் கொள்கையானது, அறிவியல் கோட்பாடுகள் அனைத்திலும் மிகவும் அழகானது, ஆற்றல் வாய்ந்தது. அறிவுக்கு முழு நிறைவளிக்கக் கூடியது என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதுவே ஐன்ஸ்டீன் அணுகுமுறைக்குச் சிறந்த வெற்றியாகும்.பொதுச் சார்புக் கொள்கை இன்னொரு அம்சத்திலும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. மற்ற அறிவியல் விதிகளில் பெரும்பாலானவை ஏறத்தாழத்தான் செல்லும்படியாகக் கூடியவை. அவை பல சூழ்நிலைகளில் சரியாக உள்ளன; ஆனால், எல்லாச் சூழ்நிலைகளிலும் சரியாக இருப்பதில்லை. நிலைகளிலும் சரியாகவே இருந்து வருகிறது. இதுகாறும், எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்தக் கொள்கை தவறாகிப் போனதில்லை; இந்தக் கொள்கைக்கு எதிர்காலப் பரிசோதனைகளில் இந்த அளவுக்கு வெற்றி கிட்டாமல் போகலாம். எனினும், இதுகாறும் விஞ்ஞானிகளால் வகுக்கப்பட்டுள்ள அணுகுமுறைகளில், இறுதி உண்மைக்கு மிக நெருக்கமாக உள்ளது சார்புக் கொள்கை தான் என்பதில் ஐயமில்லை.ஐன்ஸ்டீன் தமது சார்புக் கொள்கைகளுக்காகப் புகழ் பெற்றுள்ள போதிலும், அவருடைய மற்ற அறிவியல் சாதனைகளும் விஞ்ஞானி என்ற முறையில் அவருக்குப் புகழ் தேடித் தந்திருக்கிறது. ஒளி மின் விளைவினை (Photo Electric Effect) அவர் விளக்கிக் கூறினார். இதற்காக அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த விளக்கத்தில் "ஃபோட்டோன்" என்ற ஒளித்துகள் இருப்பதை அவர் கண்டறிந்து கூறினார். ஒளியில் மின்காந்த அலைகள் அடங்கியிருக்கின்றன என்றும், அலைகளும், துகள்களும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை என்றும் நெடுங்காலமாகக் கருதப்பட்டு வந்தது. இந்தப் பழைய கொள்கையை ஐன்ஸ்டீனின் கொள்கை சிதறடித்து விட்டது. இவருடைய ஒளிமின் விளைவு விதி நடை முறையில் பெருமளவுக்குப் பயன்பாடுடையதாகியதுடன், ஒளித் துகள் பற்றி இவரது கருதுகோள் பேருதவியாக இருந்தது. இன்று கதிரியக்க அலைவீச்சுக் கோட்பாட்டின் ஓர் அங்கமாக இந்தக் கருதுகோள் விளங்குகிறது.ஐன்ஸ்டீனின் முக்கியத்துவத்தை மதிப்பிடுங்கால், அவரை ஐசக் நியூட்டனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். ஐசக் நியூட்டனின் கோட்பாடுகள், அடிப்படையில் புரிந்து கொள்வதற்கு எளிதானவை; இந்தக் கோட்பாடுகளை முதன் முதலில் உருவாக்கியதில் தான் அவருடைய அறிவாற்றல் அடங்கியுள்ளது. மாறாக, ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கைகள் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானவை. அவற்றை மிகக் கவனமாக விளக்கிக் கூறினால் கூட விளங்கிக் கொள்வது கடினம். அப்படி கடினமாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்; நியூட்டனின் சில கொள்கைகள் அவர் காலத்தில் நிலவிய அறிவியல் கொள்கைகளுடன் பெரிதும் முரண்பட்டிருந்த போதிலும் தனக்குத்தானே முரண்பாடாக இருக்கவில்லை. இதற்கு மாறாக, சார்புக் கொள்கையில் முரண்பாடுகள் நிறைந்திருக்கின்றன. ஐன்ஸ்டீன் புகழ் பெறாதிருந்த குமரப் பருவத்திலேயே தமது கருது கோள்களை வகுத்தமைத்தார். அவை பரிசோதிக்கப்படாமல் இருந்தன. அவர் தமது கருதுகோள்களில் கண்டறிந்த முரண்பாடுகளால் மனச் சோ‘ர்வடையவில்லை. அக்கொள்கைகளை அவர் ஒதுக்கித் தள்ளிவிடவில்லை. இந்த முரண்பாடுகளை அவர் தமது அறிவாற்றல் மூலம் மிகக் கவனமாக ஆராய்ந்தார். இந்த முரண்பாடுகள் தமது தவறினால் ஏற்பட்டவை அல்ல என்பதையும், அவை இயல்பாகவே உள்ளவை என்பதையும் அவர் மெய்ப்பித்தார். அந்த முரண்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் தீர்வு காண்பதற்குரிய சரியான, நுட்பமான வழி உண்டு என்பதையும் அவர் கூறினார்.இன்று, ஐன்ஸ்டீனின் கொள்கை தான், நியூட்டனின் கொள்கையை விட அடிப்படையில் மிகவும் "துல்லியமானது" என்று நாம் கருதுகின்றோம். எனினும், இந்தப் பட்டியலில் ஐன்ஸ்டீன் கீழ் மட்டத்தில் இடம் பெற்றிருப்பதேன்? ஏனென்றால் நியூட்டனின் கொள்கைகள் தான் நவீன அறிவியலுக்கும் தொழில் நுட்பத்திற்கும் அடித்தளம் அமைத்தன. நவீனத் தொழில் நுட்பம் இன்றுள்ள அளவுக்கு முன்னேற்றமடைந்திருப்பதற்கு நியூட்டனின் கண்டுபிடிப்புகளே காரணம்; ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகள் காரணம் அல்ல.இந்தப் பட்டியலில் ஐன்ஸ்டீனின் இடத்தைப் பாதிக்கின்ற மற்றொரு காரணமும் உண்டு; பெரும்பாலான தேர்வுகளில் ஒரு முக்கியமான கொள்கையை உருவாக்குவதில் பலர் பங்கு பெற்றிருக்கலாம். சமதர்ம தத்துவ வரலாறு, மின்விசை மற்றும் காந்த விசைக் கோட்பாட்டின் வளர்ச்சி ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். சார்புக் கொள்கையைக் கண்டுபிடித்த பெருமை முழுமையாக ஐன்ஸ்டீனைச் சேராது என்ற போதிலும் அதன் பெரும் பகுதிக்கு அவர் தகுதியுடையவர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இதைப் போன்று முக்கியத்துவம் வாய்ந்த வேறெந்தக் கொள்கையும் போலன்றி சார்புக் கொள்கைகளின் பெரும்பகுதி தனியொரு மனிதரின் அறிவுத் திறனால் உருவானது எனக் கூறுவது நியாயமானதாகும்.ஜெர்மனியிலுள்ள உல்ம் நகரில் 1879 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் பிறந்தார். சுவிட்சர்லாந்தில் உயர்நிலைக் கல்வி பயின்ற இவர் 1900 இல் இவர் பி.எச்.டி. பட்டம் பெற்றார்., இவர் ஆசிரியத் தொழிலில் ஈடுபட விரும்பினார். ஆனால், அப்போது இவருக்கு ஆசிரியர் வேலை எதுவும் கிடைக்க வில்லை. எனினும், அதே ஆண்டில் சிறப்புச் சார்பியல், ஒளி மின்விளைவு, பிரவுனியன் இயக்கக் கோட்பாடு ஆகியவை பற்றிய தமது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். மிகச் சில ஆண்டுகளிலேயே இவரது இந்த ஆய்வுக் கட்டுரைகள்-முக்கியமாகச் சார்பியல் பற்றிய கட்டுரை-உலகில் தற்சிந்தனை வாய்ந்த தலைசிறந்த விஞ்ஞானி என்ற பெருமையை இவருக்குத் தேடித் தந்தன. இவருடைய கொள்கையை இவருக்குத் தேடித் தந்தன. இவருடைய கொள்கைகள் மிகுந்த சர்ச்சைக்குரியனவாக இருந்தன. டார்வின் நீங்கலாக, தற்கால விஞ்ஞானிகளில் வேறு எவரும் ஐன்ஸ்டீனைப் போல் வாதத்திற்கிடமானவராக இருந்ததில்லை. எனினும், இவர் 1913 இல் பெர்லின் பல்கலைக் கழகத்தில் ஒரு பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அதே சமயம், கெய்சர் வில்ஹெல்ம் இயற்பியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநராகவும், பிரஸ்ஸ’யன் அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும் ஆனார். இந்தப் பதவிகள் தம் முழு நேரத்தையும் ஆராய்ச்சியில் செலவிட இவருக்குச் சுதந்திரமளித்தன.இந்தப் பதவிகளை இவருக்கு அளித்ததற்காக ஜெர்மன் அரசு வருந்துவதற்குக் காரணமே இல்லை. ஏனென்றால், இப்பதவிகளை ஏற்ற ஈராண்டுகளுக்குள்ளேயே இவர் பொதுச் சார்புக் கொள்கையைக் கண்டுபிடித்தார். 1921 இல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் தமது ஆயுட்காலத்தின் பிற்பகுதி முழுவதிலும், உலகின் தலைசிறந்த விஞ்ஞானி என்ற பெரும் புகழுடனேயே வாழ்ந்தார்.ஐன்ஸ்டீன் யூதராக இருந்ததால், ஜெர்மனியில் இட்லர் ஆட்சிக்கு வந்த பிறகு அவருடைய நிலைமை நிலையற்றதாகியது. இவர் 1933 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்திலுள்ள பிரின்ஸ்டனில் குடியேறினார். அங்கு உயர் ஆராய்ச்சி ஆய்வுக் கூடத்தில் பணிபுரியலானார். 1940 இல் இவர் அமெரிக்கக் குடிமகன் ஆனார். ஐன்ஸ்டீனின் முதல் திருமணம் மணமுறிவில் முடிந்தது. இரண்டாம் திருமணம் மகிழ்ச்சிகரமாக அமைந்தது; இவருக்கு இரு புதல்வர்கள் பிறந்தனர். இவர் 1955 இல் பிரின்ஸ்டனில் காலமானார். ஐன்ஸ்டீன் எப்பொழுதுமே தம்மைச் சுற்றியிருந்த மனித உலகில் அக்கறை காட்டி வந்தார். அரசியல் விவரங்கள் குறித்து அவர் அடிக்கடி தமது கருத்துகளைத் தெரிவித்து வந்தார். அவர் அரசியல் கொடுங் கோன்மையைத் தீவிரமாக எதிர்த்தார். அவர் போர் ஒழிப்புக் கோட்பாட்டாளராகவும் விளங்கினார். யூதர் தாயக இயக்கத்தையும் அவர் தீவிரமாக ஆதரித்தார். உடைகள், சமூக மரபுகள் ஆகியவற்றில் அவர் தனிப் பாணிகளை கையாண்டார். அவர் நயமான நகைக்சுவை யுணர்வுடையவராகவும் மிகுந்த தன்னடக்கம் வாய்ந்தவராகவும் திகழ்ந்தார். வயலின் இசைப்பதிலும் அவர் ஓரளவு திறமை பெற்றிருந்தார். "இது போன்ற மிகச் சிறந்த அணிகலன் ஒன்றை மனித குலம் பெற்றதை எண்ணி மனிதர்கள் இறும்பூது எய்தலாம்" என்று நியூட்டனின் கல்லறையில் பொறிக்கப் பட்டுள்ளது. இந்த வாசகம் ஐன்ஸ்டீனுக்கு இன்னும் அதிகமாகப் பொருந்தும்.

Thursday, September 24, 2009

அலெக்சாண்டர் கிரகாம் பெல்

தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரோவில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு மட்டுமே முறையான பள்ளிக் கல்வி கற்றபோதிலும், இவருடைய குடும்பத்தினர் இவருக்குச் சிறந்த கல்வி கற்பித்தனர். இவர் தாமாகவும் உயர்ந்த கல்வி கற்றுக் கொண்டார். இவருடைய தந்தை, குரல் உறுப்புப் பயிற்சியிலும், பேச்சுத் திருத்த முறையிலும், செவிடர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் ஒரு வல்லுநராகத் திகழ்ந்தார். எனவே, குரல் ஒலிகளை மீண்டும் உருவாக்கிக் காட்டுவதில் இவருக்கு இயல்பாகவே ஆர்வம் எழுந்தது.அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் மாநிலத்திலிருக்கும் பாஸ்டன் நகரில் 1871 ஆம் ஆண்டில் பெல் குடியேறினார். அங்குதான் 1875 ஆம் ஆண்டில், தொலைபேசியைக் கண்டு பிடிப்பதற்கு வழி வகுத்த கண்டுபிடிப்புகளை இவர் செய்தார். இவர் தமது கண்டுபிடிப்புக்காக 1876 ஆம் ஆண்டு பிப்பரவரி7 மாதத்தில் புத்தாக்க உரிமைக்காக விண்ணப்பித்தார். சில வாரங்களுக்குப் பிறகு இந்த உரிமை இவருக்கு வழங்கப்பட்டது. (பெல் தமது விண்ணப்பத்தை அளித்த அதே நாளன்று ஆனால் சில மணி நேரம் பிந்தி, எலிஷாகிரே என்பவர், அதே போன்ற சாதனத்திற்காகப் புத்தாக்க உரிமை கோரி ஒரு விண்ணப்பத்தை அளித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)பெல்லுக்கு புத்தாக்க உரிமை வழங்கப்பட்ட பின்பு மிக விரைவிலேயே அவர் ஃபிலெடெல்ஃபியாவில் நடைபெற்ற நூற்றாண்டு விழாக் கண்காட்சியில் தொலைபேசியைக் காட்சிக்கு வைத்தார். அவரது கண்டுபிடிப்பில் பொது மக்கள் பேரார்வம் கொண்டனர். இவரது கண்டுபிடிப்புக்கு ஒரு பரிசும் கிடைத்தது. எனினும், இந்தக் கண்டுபிடிப்புக்கான உரிமைகளை 1,00,000 டாலருக்கு "வெஸ்டர்ன் யூனியன் டெலிகிராஃப் கம்பெனி" என்ற நிறுவனத்திற்கு வழங்க பெல் முன் வந்தபோது, அதை வாங்கிக் கொள்ள அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால், பெல்லும் அவரது நண்பர்களும் சேர்ந்து 1877 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தங்களடைய சொந்த நிறுவனத்தை நிறுவினார்கள். இந்த நிறுவனம்தான் இன்றைய "அமெரிக்கன் டெலிபோன் மற்றும் டெலிகிராஃப் கம்பெனி" யின் மூதாதையாகும். இவருடைய தொலைபேசிக்கு உடனடியாகப் பெருமளவில் வாணிக முறையில் வெற்றி கிட்டியது. இவர் நிறுவிய நிறுவனம் இன்று உலகிலேயே மிகப் பெரிய தனியார் வாணிக நிறுவனமாகத் திகழ்கிறது.பெல்லும், அவரது மனைவியும் 1876 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தத் தொலைபேசி நிறுவனத்தின் சுமார் 15 விழுக்காட்டு பங்குகளைச் சொந்தமாகக் கொட்ருந்தனர். ஆனால், தங்களது நிறுவனம் எத்தனை பேரளவுக்குத் ஆதாயம் ஈட்டியது என்பதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. சில மாதங்களிலேயே அவர்கள் இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளைச் சராசரி ஒரு பங்கு 250 டாலர் என்ற விலையில் விற்று விட்டனர். நவம்பர் மாதத்திற்குள் இந் நிறுவனத்தின் பங்குகள் ஒரு பங்குக்கு 1000 டாலர் என்ற விலைக்கு உயர்ந்தது. (இதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் பங்கு ஒன்று 65 டாலர் என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருந்தபோது, அந்தப் பங்கின் விலை அதற்குமேல் ஏறாது எனக் கருதிய பெல்லின் மனைவி, அந்தப் பங்குகளை உடனடியாக விற்றுவிடும்படி கணவரை வலியுறுத்தினார்). அவர்கள் 1881 ஆம் ஆண்டில், தங்களிடமிருந்த பங்குகளில் மூன்றில் ஒரு பகுதியை விவேகமின்றி மீண்டும் விற்றுவிட்டனர். எனினும் 1883 ஆம் ஆண்டில் அவர்கள் சுமார் 10,00,000 டாலர் செல்வ மதிப்புடையவர்களாக இருந்தார்கள்.தொலைபேசியைக் கண்டுபிடித்ததன் காரணமாக பெல் ஒரு பணக்காரராக ஆனபோதிலும் அவர் தமது ஆராய்ச்சிகளைக் கைவிட்டுவிடவில்லை. வேறுபல பயனுள்ள சாதனங்களையும் அவர் கண்டுபிடித்தார். அவர் பல துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆயினும், காது கேளாதவர்களுக்கு உதவி புரிவதில்தான் அவர் முக்கியமாக ஆர்வம் காட்டினார். இவருடைய மனைவிகூட ஒரு செவிட்டுப் பெண்தான். அவருக்குப் பெல்தான் கல்வி கற்பித்தார். அவர்களுக்கு இரு புதல்வர்களும், இரு புதல்விகளும் பிறந்தனர். ஆனால் இரு புதல்வர்களும் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டனர். 1882 ஆம் ஆண்டில் பெல் அமெரிக்கக் குடிமகன் ஆனார். 1922 ஆம் ஆண்டில் அவர் காலமானார்.தொலைபேசிக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தைப் பொறுத்துத்தான் பெல்லின் செல்வாக்குப் பற்றிய எந்த ஒரு மதிப்பீடும் அமையும். என்னுடைய கருத்தில், தொலை பேசியைப் போன்று வேறெந்தக் கண்டுபிடிப்பும் மிகப் பரந்த அளவில் பயன்பட்டதில்லை. வேறு எந்தச் சாதனமும் தொலைபேசியைப் போல் நமது எந்தச் சாதனமும் தொலைபேசியைப் போல் நமது அன்றாட வாழ்வில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. எனவே, பெல்லின் செல்வாக்கு மிகப் பெரிது எனக் கருதுகிறேன்.தொலைபேசியைவிட வானொலி பல திறப் பயன் பாடுடையதாக விளங்குவதால், வானொலியைக் கண்டுபிடித்த மார்கோனிக்கு அடுத்தப்படியாக பெல்லுக்கு இடமளித்திருக்கிறேன். தொலைபேசி வாயிலாக நடத்தப்படும் ஓர் உரையாடலைக் கொள்கையளவில் வானொலி வாயிலாகவும் நடத்தலாம். ஆனால் வானில் பறக்கும் விமானத்துடன் தகவல் தொடர்பு கொள்ளுதல் போன்ற பல நேர்வுகளில் வானொலி பயன்படுகின்ற அளவுக்குத் தொலைபேசி பயன்படாது. இந்த ஒரு காரணத்தால் மட்டுமே மார்கோனியை விட மிகத் தாழ்வான இடத்தைப் பெல்லுக்கு அளிக்கலாம். ஆனால், வேறு இரு அம்சங்களையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக ஒரு தனித் தொலைபேசி உரையாடலை வானொலி வாயிலாக நடத்த முடியும். ஆனால் தொலைபேசி அமைப்பு முறை முழுவதற்கும் பதிலாக அதே போன்ற சரிநிகரான வானொலிச் செய்தித் தொடர்பு இணைவனம் ஒன்றை ஏற்படுத்துவது மிகக் கடினம். இரண்டாவதாக, தொலைபேசி ஒலிவாங்கிக் (Receiver) கருவிக்காக பெல் வகுத்தமைத்த அடிப்படை ஒலி உருவாக்க முறையைப் பின்னர் வானொலி ஒலிவாங்கி, இசைத் தட்டு இயக்கக் கருவி போன்ற பல்வேறு சாதனங்களை கண்டுபிடித்தவர்கள் பொருத்தமாக மாற்றியமைத்துப் பயன்படுத்திக் கொண்டார்கள். எனவே, அலெக்சாண்டர் கிரகாம்பெல், மார்கோனியைவிட மிகக் குறைந்த அளவுதான் செல்வாக்கில் குறைந்தவர் என நான் கருதுகிறேன்.

Tuesday, September 15, 2009

சார்லஸ் பாபாஜ் (1792 - 1871)





சார்லஸ் பாபாஜ் (1792 - 1871)இக்காலத்தில் மிகப் பெரிய மின்னியல் கணிப்பு எந்திரங்கள் ( Electronic calculating machines) கண்டுபிடிக்கப்படுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே பொதுநோக்கக் கணிப்பொறியின் (Computer) தத்துவங்களைப் கண்டுவிடித்தவர் ஆங்கிலேயப் புத்தமைப்பாளரான சார்லஸ் பாபாஜ் (Charles Babbage) ஆவார். இவர் தாம் வடிவமைத்த ஒரு பொறிக்கு ''பகுப்பாய்வுப் பொறி" (Analytical engine) என்று பெயரிட்டழைத்தார். இது இன்றைய கணிக்கும் எந்திரங்கள் செய்யக் கூடிய அனைத்தையும் கொள்கையளவில் செய்வதற்கு ஆற்றலுடையதாக இருந்தது. ஆனால், பகுப்பாய்வுப் பொறி, மின்விசையால் இயங்கவில்லையாதலால், அத்துணை விரைவாக இயங்கவில்லை. தீவினைப் பயனாக, 19 ஆம் நூற்றாண்டுத் தொழில் நுட்பம் போதிய அளவுக்கு முன்னேற்றமடையாமல் இருந்ததால், பாபாஜ் ஏராளமான பணத்தையும் காலத்தையும் செலவிட்ட போதிலும், இப்பகுப்பாய்வு பொறியை அவரால் முழுமையாகத் தயாரிக்க முடியவில்லை. அவருடைய மரணத்திற்குப் பிறகு அவரது அற்புதமான புதுப் புனைவுத்திறன் வாய்ந்த கொள்கைகள் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டன.எனினும் 1937 ஆம் ஆண்டில் ஹார்வர்டுப் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பு மாணவராகிய ஹோவர்டு எச். அய்க்கன் (Howerd H. Aiken) என்பவரின் கவனத்தை பாபாஜின் எழுத்துகள் கவர்ந்தன. அய்க்கன் ஒரு கணிப்பு எந்திரத்தை வடிவமைக்க முயன்று கொண்டிருந்தார். எனவே அவருக்கு பாபாஜின் கருத்துகள் பெருந்தூண்டுதலாக அமைந்தன. ஐ,பி.எம் (IBM) கூட்டுறவுடன் முதலாவது பெரிய பொது நோக்கக் கணிப்பொறியாகிய மார்க்-1 (MarK-1) அய்க்கன் உருவாக்கினார். மார்க் -1 செயற்படித் தொடங்கிய ஈராண்டுகளுக்கு பிறகு 1946 ஆம் ஆண்டில் பொறியியல் வல்லுநர்களும், புத்தமைப்பாளர்களும் அடங்கிய மற்றொரு குழுவினர், ''ஈனியாக்" (Eniac) என்ற முதலாவது மின்னியல் கணிப்பு எந்திரத்தைத் தயாரித்தனர். அது முதற்கொண்டு கணிப்பொறித் தொழில் நுட்பத்தில் அசுர வேகத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.கணிப்பு எந்திரங்கள் உலகின் மீது ஏற்கெனவே மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அவை எதிர்காலத்தில் இன்னும் அதிக முக்கியத்துவத்தைப் பெறக்கூடும். இந்நூலின் மூலப்பகுதியில் சார்லஸ் பாபாஜை சேர்க்க வேண்டும் என்ற எண்ணங்கூட எனக்குத் தோன்றியது. ஆயினும், கவனமாகச் சிந்தித்த பிறகு அய்க்கனையோ ''ஈனியாக்'' கணிப்பு எந்திரத்தை வடிவமைப்பதில் பெரும்பங்கு கொண்ட ஜான் மாக்லி, ஜே.பி. எக்கர்ட் ஆகியோரைவிட கணிதப் பொறிகள் தயாரிப்பதில் பாபாஜ் கணிசமான அளவுக்கு அதிமாக எதுவும் செய்து விடவில்லை என்ற முடிவுக்கு வந்தேன். அந்த வகையில், பாபாஜிக்கு முற்போந்த குறைந்தது மூன்று விஞ்ஞானிகளின் - பிளேஸ் பாஸ்கல், காட்ஃபீரிட் லைப்னிஸ், ஜோசஃப் மேரி ஜேக்கார்டு ஆகிய மூவரின் - பணிகளை பாபாஜின் பணிக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் கூறலாம். புகழ் பெற்ற ஃபிரெஞ்சு விஞ்ஞானியும், கணித மேதையும் தத்துவஞானியுமாகிய பாஸ்கல், 1642 ஆம் ஆண்டிலேயே எந்திர முறைக் கூட்டல் பொறியை (Machanical adding machine) கண்டுபிடித்திருந்தார். தத்துவஞானியும் கணிதமேதையுமான காட்ஃபரீட் வான் லைப்னிஸ், கூட்டல் கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றைச் செய்யக்கூடிய ஓர் எந்திரத்தை வடிவமைத்ததார். இக் காலத்துக் கணிப்பு எந்திரங்களில் வெகுவாகக் கையாளப்படும் ஓர் எண்மான முறையின் (Sytem of Notation) ஈரிலக்க எண்மான முறையின் (Binary system) முக்கியத்துவத்தை முதன் முதலில் விளக்கிக் கூறியவரும் லைப்னிசேயாவார். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஜேக்கார்டு ஒரு ஃபிரெஞ்சு அறிஞர்.
அவர் ஒரு தறியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் துளையிட்ட அட்டைகளைப் பயன்படுத்தும் சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்தார். ஜேக்கார்டின் தறி வாணிக முறையில் மிகவும் வெற்றியாக அமைந்தது. அவருடைய இந்தத் தறி, பாபாஜின் சிந்தனையில் வெகுவாகச் செல்வாக்குப் பெற்றது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மக்கள் தொகைக் கணிப்பு அட்டவணைகளில் பயன்படுத்தப்படுவதற்காக, துளையிட்ட அட்டைகளைக் கையாண்ட ஹெர்மன் ஹோலரித் (Herman Hlollerith) என்ற அமெரிக்கரிடமும் இந்தப் பொறி செல்வாக்குக் கொண்டிருக்க வேண்டும்.
எனவே, நவீன கணிப் பொறியைக் கண்டுபிடித்த முக்கிய பெருமையை மேற்சொன்ன பல்வேறு அறிஞர்களுக்கும் சரி சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டியுள்ளது. அவர்கள் ஒவ்வொருவருமே சரிநிகராகத் தொண்டு புரிந்திருக்கிறார்கள். எந்த ஒருவருடைய பணியும் மற்றவர்களுடையதைவிட மேம்பட்டது என திட்டமாகக் கூறுவதற்கில்லை. எனவே, பாபாஜோ அல்லது மற்றவர்களில் எவருமோ, இந்நூலின் மூலப் பகுதியில் இடம் பெறும் அளவுக்குத் தகுதியுடையவர்களாகத் தோன்றவில்லை.
நன்றி : உதயன்

Friday, September 11, 2009

கிறிஸ்டோபர் கொலம்பஸ் (1451 - 1506)


கிறிஸ்டோபர் கொலம்பஸ், ஐரோப்பாவிலிருந்து கீழ்த்திசை நாடுகளுக்கு மேற்கு நோக்கி ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயன்று தற்செயலாக அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அதன் மூலம், தாம் எதிர்பாராத பெரும் செல்வாக்கினை உலக வரலாற்றில் பெற்றார். இவரது கண்டுபிடிப்பு, புதிய உலகில் தொடர்ந்து நாடாய்வுக்கும், குடியேற்ற ஆதிக்கத்திற்கும் வழி வகுத்தது. இந்தக் கண்டுபிடிப்பு, உலக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் விளங்கியது. அது மக்கள் தொகை பெருகி வந்த ஐரோப்பாவின் மக்கள் குடியேறுவதற்கு இரு புதிய கண்டங்களுக்கு வழி திறந்து விட்டது. ஐரோப்பாவின் பொருளாதாரத்தில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்படுத்திய கனிமச் செல்வத்திற்கும், மூலப் பொருள்களுக்கும் ஆதாரங்களை அளித்தது. அவருடைய கண்டுபிடிப்பினால், அமெரிக்கச் சிவப்பிந்தியர்களின் நாகரிகங்கள் அழிந்து போயின. நாளடைவில், மேற்கு கோளார்த்தத்தில் ஒரு காலத்தில் குடியிருந்த சிவப்பிந்தியரின் நாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட புதிய நாடுகள் அங்கு தோன்றுவதற்கு இக்கண்டுபிடிப்பு வழி வகுத்தது. இந்தப் புதிய நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் பெரும் நிலைமாற்றத்தை ஏற்படுத்தின.
உலகில் இத்துணை பெரும் மாறுதல்களுக்கு வழி வகுத்த இந்த முக்கியக் கண்டுபிடிப்பைச் செய்த கொலம்பஸ், இத்தாலியிலுள்ள ஜெனோவாவில் 1451 இல் பிறந்தார். அவர் தேர்ந்த கடல்வழி வல்லுநராகி ஒரு கப்பலின் தலைவரானார். அட்லாண்டிக் மாகடல் வழியாக நேர் மேற்காகச் சென்று, கிழக்கு ஆசியாவுக்கு நடைமுறை மார்க்கம் ஒன்றைக் கண்டுபிடிக்கலாம் என அவர் உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கையைச் செயற்படுத்துவதற்கு அவர் விடாமுயற்சியுடன் பாடுபட்டார். இறுதியாக, அந்தக் கடல் வழியைக் கண்டுபிடிக்க தாம் மேற்கொள்ளவிருந்த பெரும் பயணத்திற்கு காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லாவின் நிதியுதவியைப் பெறுவதில் வெற்றி கண்டார்.
இவருடைய கப்பல் அணி, 1492 ஆகஸ்ட் 3 அன்று ஸ்பெயினிலிருந்த பயணத்தைத் தொடங்கியது. அவர்கள், முதலில் ஆஃப்ரிக்ககக் கடலோரமிருந்த கானரித் தீவுகளில் இறங்கினார்கள். கானரித் தீவுகளிலிருந்து செப்டம்பர் 6 அன்று புறப்பட்டு, நேர் மேற்காகக் கப்பல்களைச் செலுத்தினார்கள். அது ஒரு நீண்ட பயணமாக இருந்தது. அவரது மாலுமிகள் அச்சம் கொண்டார்கள். தாயகம் திரும்பிவிட விரும்பினார்கள். ஆனால், கொலம்பஸ் பயணத்தைத் தொடரும்படி வலியுறுத்தினார். 1492 அக்டோபர் 12 அன்று அவர்களுக்குத் தரை தென்பட்டது. அங்கே தரையிறங்கினார்கள்.
அடுத்து வந்த மார்ச் மாதத்தில் கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பினார். பெருஞ்சாதனை புரிந்த கொலம்பஸ் வெற்றி வீரருக்குரிய மிக உயர்ந்த மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார். அதன் பின்பு, žனாவுடன் அல்லது ஜப்பானுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் நம்பிக்கையில் அவர் மூன்று முறை அட்லாண்டிக் கடலில் பயணம் மேற்கொண்டார். ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. எனினும், கிழக்கு ஆசியாவுக்கு ஒரு கடல் வழியைத் தாம் கண்டுபிடித்து விட்டதாகவே அவர் உறுதியாக நம்பினார். அவர் கண்டுபிடித்தது கிழக்கு ஆசியாவுக்குரிய கடல் வழி அன்று என்பதைப் பெரும் பாலான மக்கள் நெடுங்காலத்திற்கு பின்னரே உணர்ந்தனர்.
கொலம்பஸ் கண்டுபிடிக்கும் ஏதேனுமொரு நிலப்பகுதிக்கு அவரை ஆளுநராக நியமிப்பதாக அவருக்கு இசபெல்லா அரசி வாக்குறுதியளித்திருந்தார். அதன்படி கொலம்பஸ் கண்டுபிடித்த நிலப்பகுதிக்கு அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால், நிருவாகி என்ற முறையில் அவர் திறமையற்றவராக இருந்தார். எனவே, அவர் ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கை விலங்குடன் ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டார். ஸ்பெயினில் அவர் விடுதலை செய்யப்பட்ட போதிலும், அதன் பின்னர் அவருக்கு நிருவாகப் பதவி எதுவும் அளிக்கப்படவில்லை. அவர் இறுதி நாட்களில் வறுமையில் வாடி மாண்டதாகச் சிலர் கூறுவர். ஆனால் அது உண்மையன்று அவர் 1506 இல் காலமான போது ஓரளவுக்குச் செல்வச் செழிப்புடனேயே இருந்தார்.
கொலம்பசின் முதற்பயணம் ஐரோப்பாவின் வரலாற்றில் புரட்சிகரமான தாக்குறவை ஏற்படுத்தியது. அதைவிட பெரும் விளைவுகள் அமெரிக்காவில் ஏற்பட்டன. இன்றைய உலகில் ஒவ்வொரு பள்ளி மாணவரும் 1492 ஆம் ஆண்டை அறிவர். ஆயினும், உலகப் பெரியோர்களின் வரிசையில் கொலம்பசைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களும் இருக்கின்றனர். இவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு ஒரு காரணம். புதிய உலகைக் கண்டு பிடிக்கும் முதல் ஐரோப்பியர் கொலம்பஸ் இல்லை, என்பதாகும். கொலம்பசுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே லெஃய்ப் எரிக்சன் என்ற ஸ்காண்டிநேவிய (வைக்கிங்) மாலுமி அமெரிக்கா சென்றடைந்ததாகவும், அவரைப் பின்பற்றிக் கொலம்பசுக்கு முன்னதாக பல ஐரோப்பியர்கள் அட்லாண்டிக்கைத் தாண்டி அமெரிக்கா சென்று வந்திருக்கலாம் என்பதும் இவர்களுடைய வாதம். ஆனால், வரலாற்றை நோக்கிப் பார்த்தால் லெஃய்ப் எரிக்சன் முக்கியமானவர் அன்று. அவருடைய கண்டு பிடிப்புகள் யாருக்கும் தெரியவரவில்லை. மேலும், அவருடைய கண்டுபிடிப்புகளினால், ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ பெரும் மாறுதல்கள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. இதற்கு மாறாக, கொலம்பசின் கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகள் ஐரோப்பா முழுவதும் மிக விரைவாகப் பரவின. அவர் ஐரோப்பா திரும்பிய சில ஆண்டுகளிலேயே, அவருடைய கண்டுபிடிப்புகள் நேரடி விளைவுகளாக, புதிய உலகுக்குப் பல புதிய கடற்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. புதிய நிலப்பரப்புகளை வெற்றி கொண்டு, குடியேற்றங்களை அமைக்கும் பணி தொடங்கியது.
கொலம்பஸ் தோன்றாமல் இருந்திருந்தாலும், அவர் சாதித்ததை யாராவது சாதித்திருப்பார்கள் என்று சிலர் வாதிடுவர். இந்நூலில் இடம்பெற்ற மற்ற பெரியார்களைப் பற்றிக்கூட இத்தகைய வாதம் எழுந்ததுண்டு. பதினைந்தாம் நூற்றாண்டு ஐரோப்பா ஏற்கெனவே கொந்தளித்துக் கொண்டிருந்தது. அங்கு வாணிகம் பெருகி வந்தது. வாணிகப் பெருக்கத்திற்குப் புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பது இன்றியமையாததாக இருந்தது. போர்ச்சுகீசியர்கள், கொலம்பசுக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே கிழக்கிந்திய தீவுகளுக்குப் புதிய வழியைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

அமெரிக்கா விரைவிலேயே ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப்பட்டிருக்கக்கூடும். அமெரிக்கக் கண்டத்தை கண்டு பிடிப்பதில் அதிகக் காலத் தாழ்வும் ஏற்பட்டிருக்காது. ஆனால், அமெரிக்காவை 1492 இல் கொலம்பஸ் கண்டுபிடிக்காமல் 1510 இல் ஒரு ஃபிரெஞ்சு அல்லது ஆங்கிலேய நாடாய்வுக் குழு கண்டுபிடித்திருக்குமானால், அதன் பின் விளைவுகள் முற்றிலும் வேறாக இருந்திருக்கும். எது எவ்வாறயினும், அமெரிக்காவை உள்ளபடியே கண்டுபிடித்த மனிதர் கொலம்பஸே ஆவார்.
முதலாவது காரணம் கொலம்பசின் பயணங்களுக்கு முன்னரே. 15 ஆம் நூற்றாண்டு ஐரோப்பியர்கள் பலர் உலகம் உருண்டையானது என்பதை அறிந்திருந்தனர். உலகம் உருண்டை என்ற கொள்கையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கத் தத்துவஞானிகள் எடுத்துக் கூறியுள்ளனர். இது பற்றிய அரிஸ்டாட்டிலின் முற்கோளை 1400 களில் படித்த ஐரோப்பியர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உலகம் உருண்டை என்பதை மெய்பித்துகூ காட்டியதற்காகக் கொலம்பஸ் புகழ் பெறவில்லை. உண்மையைக் கூறின், உலகம் உருண்டை என்பதை மெய்ப்பிப்பதில் அவர் வெற்றி பெறவில்லை. புதிய உலகைக் கண்டுபிடித்தற்காகவே அவர் புகழ் பெற்றார். பதினைந்தாம் நூற்றாண்டு ஐரோப்யிர்களே, அரிஸ்டாட்டிலோ அமெரிக்கக் கண்டங்கள் இருப்பதை அறிந்திருக்கவே இல்லை.
கொலம்பசின் பண்புகள் முற்றிலும் போற்றுவதற்குரியனவாக இருக்கவில்லை. அவர் மிகவும் பேராசை கொண்டவராக இருந்தார். தமது பயணத்திற்கு நிதியுதவியளிக்க இசபெல்லா அரசியை இணங்க வைக்க அவர் அரும்பாடுபட வேண்டியிருந்தது. இதற்கு முக்கிய காரணம் அவர் மிகுந்த பேராசையுடன் பேரம் பேசியதேயாகும். மேலும், இன்றைய அறவியல் தராதரங்களின் அடிப்படையில் அவருடைய நடத்தையைக் கணிப்பது நியாயமில்லையென்றாலும், அவர் சிவப்பிந்தியர்களை மிகவும் கொடூரமாக நடத்தனார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும், இது வரலாற்றில் உன்னதப் பண்பியல்புகளைக் கொண்டிருந்தவர்களின் பட்டியல் அன்று; மாறாக, மிகுந்த செல்வாக்குப் பெற்றவர்களின் பட்டியலே இது. அந்த வகையில் பார்த்தால், இந்தப் பட்டியலில் முன்னணியிடத்தைப் பெறுவதற்கு கொலம்பஸ் முற்றிலும் தகுதியுடையவரே யாவார்.



நன்றி :--உதயன்--

Thursday, September 10, 2009

Check out Dishyum | Download Tamil songs

Title: Dishyum | Download Tamil songs

Link: http://gotaf.socialtwist.com/redirect?l=834829128333837498111

Sunday, September 6, 2009

எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு (1871-1937)



இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பரிசோதனை இயற்பியல் விஞ்ஞானி எனப் பொதுவாகக் கருதப்படுபவர் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு ஆவார். கதிரியக்கம் பற்றி இன்று நாம் பெற்றிருக்கும் அணுவியல் இயற்பியல் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கி வைத்தவரும் அவரே. அவருடைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் அளவிறந்த கோட்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தனவாகத் திகழ்ந்தவுடன், அணு ஆயுதங்கள், அணுமின் நிலையங்கள், கதிர்வீச்சு ஏவுகலங்கள், உள்ளடலங்காக, பல்வேறு முக்கியப் பயன்பாடுகளையும் கொண்டிருந்தன. எனவே, உலகின் மீது அவரது செல்வாக்கு மிக ஆழமானது; இச்செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது; நீண்ட நெடுங்காகலம் நீடித்து நிற்கக்கூடியது.


ரூதர்ஃபோர்டு, நியூசிலாந்தில் பிறந்து வளர்ந்தார். அங்குள்ள கான்டர்பரிக் கல்லூரியில் பயின்று, தம் 23 ஆம் வயதுக்குள்ளேயே மூன்று பட்டங்களை (பி.ஏ., எம்.ஏ., பி.எஸ்சி.,) பெற்றார். அடுத்த ஆண்டில், இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்கு அவருக்குப் படிப்புதவித் தொகை கிடைத்தது. அங்கு, அந்நாளில், தலைசிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவராகத் திகழ்ந்த ஜே.ஜே. தாம்சன் அவர்களின் கீழ் மூன்றாண்டுகள் ஆராய்ச்சி மாணவரா இருந்தார். பின்னர் தம் 27 ஆம் வயதில் கனடாவிலுள்ள மக்கில் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பேராசிரியரானார். ஒன்பது ஆண்டுகள் அப்பதவியில் நீடித்தார். 1907 இல் இங்கிலாந்து திரும்பி மாஞ்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவரானார். 1919 இல் மீண்டும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்குத் திரும்பி, அங்குள்ள கேண்டிஷ் ஆய்வுக்கூடத்தின் இயக்குநரானார். தம் ஆயுட்காலம் முழுவதும் அவர் அங்கேயே பணியாற்றினார்.
பிரெஞ்சு விஞ்ஞானி அன்டேய்ன் ஹென்றி பெக்கரல் என்பவர் 1896 இல் யுரேனியம் கூட்டுப் பொருள்களில் சில பரிசோதனைகளைச் செய்து கொண்டிருந்தபோது கதிரியக்கத்தை தற்செயலாகக் கண்டுபிடித்தார். ஆனால், பெக்கரல் விரைவிலேயே இத்துறையில் அக்கறை இழந்தார். அதன் பின், இத்துறையில் நாம் பெற்றுள்ள அடிப்படைத் தகவல்கள் பெரும்பாலும் ரூதர்ஃபோர்டின் விரிவான ஆராய்ச்சிகள் மூலமே கிடைத்துள்ளன. (மேரி கியூரி, பியர் கியூரி இருவரும் போலோனியம், ரேடியம் என்ற மேலும் இரு கதிரியக்கத் தனிமங்களைக் கண்டு பிடித்தனர். ஆனால், அவர்கள் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புகள் எவற்றையும் செய்யவில்லை).
யுரேனியத்திலிருந்து வெளியேறும் கதிரியக்க உமிழ் பொருள்களில் முற்றிலும் வேறுபட்ட இரு அமைப்பான்கள் அடங்கியுள்ளன என்பது ரூதர்ஃபோர்டின் முதல் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இவற்றுக்கு "ஆல்ஃபா கதிர்கள்", "பீட்டா கதிர்கள்" என்று அவர் பெயரிட்டார். கதிரியக்கப் பொருள்களிலிருந்து வெளிவரும் அணு நுண்ம வரிசையே ஆல்ஃபாக் கதிர்கள் ஆகும். கதிரியக்கப் பொருள்களால் உமிழப்படும் விரை செலவுடைய எதிர்மின்மங்களின் வரிசை தான் பீட்டாக் கதிர்கள். இந்த அமைப்பான்கள் ஒவ்வொன்றின் இயல்பையும் அவர் பின்னர் செயல் விளக்கமாகக் காட்டினார். இவற்றில் விரைந்து இயங்கும் துகள்கள் அடங்கியுள்ளன என்று மெய்ப்பித்தார். அத்துடன், மூன்றாவது அமைப்பான் ஒன்றும் இருப்பதாக மெய்ப்பித்தார். அதனை "காமாகக் கதிர்கள்" என்று அழைத்தார். இவை, மிகக் குறுகிய ஒளிக் கதிரலையுள்ள ஊடுருவு கதிர்கள் ஆகும்.





கதிரியக்கத்தின் மிக முக்கியமான அம்சம் அதில் அடங்கியுள்ள எரியாற்றலே ஆகும். இந்த எரியாற்றல், ஒரு புற ஆதாரத்தைக் கொண்டிருப்பதாக பெக்கரல், கியூரிகள், பெரும்பாலான மற்ற விஞ்ஞானிகள் அனைவரும் கருதினார்கள். ஆனால், இந்த எரியாற்றல், யுரேனியத்தின் தனித்தனி அணுக்களின் உள்ளிருந்து வருகிறது என்று ரூதர்ஃபோர்டு மெய்ப்பித்துக் காட்டினார். இந்த எரியாற்றலின் அளவு, வேதியியல் வினைகளிலிருந்து வெளிப்படும் அளவை விட மிகமிக அதிகம் என்பதையும் அவர் மெய்ப்பித்தார். அவ்வாறு செய்ததன் மூலம், அணு ஆற்றல் என்ற முக்கியமான கோட்பாட்டை உருவாக்கினார்.
தனித்தனி அணுக்கள் அழிக்க முடியாதவை-மாற்ற முடியாதவை- என்று விஞ்ஞானிகள் எப்போதுமே கருதி வந்தார்கள். ஆனால், ரூதர்ஃபோர்டு, பிரெடெரிக் சோடி என்ற மிகத் திறமை வாய்ந்த இளம் உதவியாளரின் உறுதுணையுடன், ஓர் அணு ஆல்பாக் கதிர்களையோ, பீட்டாக் கதிர்களையோ உமிழும் போதெல்லாம், அந்த அணு முற்றிலும் மாறுபட்ட தன்மையுள்ள ஓர் அணுவாக உருமாற்றமடைகிறது என்பதை மெய்ப்பித்தார். அவரது கூற்றை வேதியியல் வல்லுநர்கள் முதலில் நம்ப மறுத்தார்கள். ஆனால், யுரேனியத்தை ஈயமாக உருமாற்றக்கூடிய கதிரியக்கச் சிதைவுத் தொடர் சோதனைகளை ரூதர்ஃபோர்டும், பிரெடெரிக் சோடியும் செய்து காட்டினார்கள், சிதைவு விகிதங்களையும் அவர்அளந்து காட்டினார். "அரை ஆயுள்" என்ற முக்கியமான கோட்பாட்டினையும் வகுத்தரைத்தார். இது விரைவிலேயே "கதிரியக்கக் காலக் கணிப்பு" என்ற உத்திக்கு வழி வகுத்தது. இந்த உத்தி, மிகவும் பயனுள்ள அறிவியல் சாதனமாகப் பயன்படலாயிற்று. புவியியல், தொல்பொருளியல், வானியல் போன்ற ஏராளமான துறைகளில் இந்த உத்தி முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்புகள், ரூதர்ஃபோர்டுக்கு 1908 இல் நோபல் பரிசு பெற்றுத் தந்தது. (பின்னர் சோடிக்கும் நோபல் பரிசு கிடைத்தது). ஆனால், அவரது மிகச் சிறந்த சாதனை அதன்பின் தான் வரவிருந்தது. விரைந்தியங்கும் ஆல்ஃபா துகள்கள், ஒரு மெல்லிய தங்கத் தகட்டினை (துளை கண்ணுக்குப் புலனாகாமலே) ஊடுருவித் துளைக்கக் கூடியவை என்பதை அவர் கண்டறிந்தார். ஆனால், அத்துகள்கள் அவ்வாறு ஊடுருவும்போது சற்றே கோட்டமடையும் என்பதையும் கண்டார். தங்கத்தின் அணுக்கள், "நுண்ணிய பில்லியர்ட் பந்துகள்" போன்று, கடினமான, ஊடுருவ முடியாத பொருள்ள் என்று விஞ்ஞானிகள் முன்பு நம்பிக்கை கொண்டிருந்ததற்கு மாறாக, உள்ளே மென்மையானவை என்பதை இது உணர்த்தியது. மிக விரைந்து பாயும் துப்பாக்கிக் குண்டு ஒரு பாகினுள்ளே பாய்ந்து செல்வது போல், சிறிய கடினமான, ஆல்ஃபா துகள்களும், தங்க அணுக்களை ஊடுருவித் துளைத்துச் செல்லும் என்பதும் இதன் மூலம் தெரிய வந்தது.
ஆனால், கெய்ஜர் மார்ஸ்டென் என்ற தமது இரு இளம் உதவியாளர்களின் உதவியுடன் ஆராய்ச்சி நடத்தி, சில ஆல்ஃபா துகள்கள் தங்க தகட்டினை தாக்கும்போது கடுமையாகக் கோட்டமடைவதைக் கண்டார். சில சமயம் திரும்பி வந்து தாக்குவதையும் அறிந்தார்! இதில் ஏதோவொரு முக்கியமான வினை அடங்கியிருக்கிறத என்பதை உணர்ந்து ரூதர்ஃபோர்டு தமது பரிசோதனையைப் பலமுறை திரும்பத் திரும்பச் செய்து பார்த்தார். ஒவ்வொரு திசையிலும் சிதறிச் செல்லும் துகள்களின் எண்ணிக்கையை மிகமிகக் கடினமான, ஆனால், மிகவும் நம்பகமான கணிதப் பகுப்பாய்வு மூலம், பரிசோதனை முடிவுகளை விளக்குவதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு என்று அவர் காட்டினார். தங்கத்தின் ஓர் அணுவில், பெரும்பாலும் முழுக் காலியிடம் உள்ளது; இந்த அணுவின் பொருண்மை முழுவதும் மையத்திலுள்ள ஒரு நுண்ணிய மையக் கருவில் செறிந்தடங்கியிருக்கிறது!
ரூதர்ஃபோர்டின் இந்த ஆய்வுக் கட்டுரை (1911), ஒரே கல்லில், இந்த உலகம் பற்றிய நமது பொது அறிவுக் கண்ணோட்டம் முழுவதையும் சிதறடித்து விட்டது. மிகவும் திடமான பொருளாகத் தோன்றும் ஓர் உலோகம் கூட பெரும்பாலும் காலியிடமேயாகும்; திண்மை வாய்ந்தவை என நாம் கருதிய ஒவ்வொரு பொருளும், திடீரென அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்துள்ள வெற்றிடத்தில் நுண்ணிய புள்ளிகளாகக் கரைந்து போயின!
அணு மையக் கரு பற்றிய ரூதர்ஃபோர்டின் இந்த கண்டுபிடிப்பு, அணுவின் கட்டமைப்பு குறித்த இன்றையக் கோட்பாடுகள் அனைத்திற்கும் அடித்தளமாக அமைந்தது. இதற்கு ஈராண்டுகளுக்குப் பிறகு நீல்ஸ் போர் தமது புகழ் பெற்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். அதில், அவர், அணுவை, கதிரியக்க ஆற்றல் அலை வீச்சு இயக்கவியலின் ஆளுகைக்குட்பட்ட ஒரு 'குட்டி சூரிய மண்டலம்' என்று வருணித்தார். இதற்கான உரு மாதிரிக்கு ஒரு தொடக்க நிலையாக ரூதர்ஃபோர்டின் அணுவியல் அணுவைப் பயன்படுத்திக் கொண்டார். அதே போன்று, ஹெய்சன்பர்கும் ஷ’ரோடிங்கரும், அதிக நேர்த்தியான அணுவியல் உருமாதிரிகளை, அச்சு வார்ப்புரு இயக்கவியலையும், அலை இயக்கவியலையும் பயன்படுத்தித் தயாரித்தபோது, அவர்களும், ரூதர்ஃபோர்டின் அணுவியல் அணுவையே பயன்படுத்திக் கொண்டனர்.
அதுமட்டுமின்றி, ரூதர்ஃபோர்டின் கண்டுபிடிப்பு, அறிவியல் ஒரு புதிய பிரிவையும் தோற்றுவித்தது. அதுதான் அணு மையக் கரு ஆய்வியல் ஆகும். இதிலும், ரூதர்ஃபோர்ட் முன்னோடியாகத் திகழ்ந்தார். 1919இல், அவர் விரைந்தியங்கும், ஆல்ஃபாத் துகள்கள் மூலம் தாக்குதல் நடத்தி, நைட்ரஜன் மையக்கருக்களை, ஆக்சிஜன் மையக்கருக்களாக உருமாற்றிக் காட்டினார். இது பண்டைய இரசவாதிகளின் கனவுகளையும் விஞ்சிய ஒரு மகத்தான சாதனையாகும்.
இந்த அணுவியல் உருமாற்றங்கள்தான், சூரியனின் எரியாற்றலுக்கு ஆதாரமாக இருக்கும் என்பது விரைவிலேயே தெரிய வந்தது. மேலும், அணுவியல் மையக் கருக்களை உருமாற்றம் செய்வதுதான், அணு ஆயுதங்கள் தயாரிப்பிலும், அணுமின் நிலையங்களில் முக்கியமான செயல் முறையாக அமைந்தது. எனவே, ரூதர்போர்டின் கண்டுபிடிப்பு வெறும் அறிவார்ந்த ஆர்வம் மட்டுமே கொண்டதன்று; அதைவிட மிக அதிகமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உலகம் அறிந்து கொண்டது.
ரூதர்ஃபோர்டின் "இயல்பு கடந்த ஆளுமை" அவரைச் சந்தித்த எல்லோரையும் வெகுவாகக் கவர்ந்தது. அவர் பருத்து உயர்ந்த உடற்கட்டு கொண்டவர்; உரத்த குரல் உடையவர்; அளவற்ற ஆற்றல் நிறைந்தவர்; அளப்பரிய தன்னம்பிக்கை கொண்டவர்; யாருக்கும் பணிந்து போகாதவர்; அவரது இயல்பு மீறிய திறம்பாட்டினை "அறிவியல் ஆராய்ச்சியின் அலைமுகடு" என்று அவருடைய சக விஞ்ஞானியொருவர் வருணித்தபோது, "அதை யார் மறுக்க முடியும்?" அந்த அலையை உருவாக்கியதே நான்தானே! என்று பதிலளித்தார். இதை மறுக்க எந்த விஞ்ஞானியால் முடியும்?